![Students who achieved in the ISRO project! The minister gave a surprise meeting in person!](http://image.nakkheeran.in/cdn/farfuture/l--4mnZTOmbMTT-cYK-HVCpFyrrQXhe3BB2poC--Gh4/1659600020/sites/default/files/inline-images/th_2970.jpg)
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத்துடன் ‘வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள்.
இந்நிலையில் மதுரைக்கு வேறொரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளைச் சந்தித்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, அவர்களுக்கு புத்தகங்களையும் பரிசளித்தார்.மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7’ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.