Skip to main content

“ஆளுநரால் மாணவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்” - துரை. வைகோ 

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

“Students have lost job opportunities because of the governor” - Durai Vaiko

 

ஆறு மாத காலத்திற்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை. வைகோ தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர்  ஆர்.என். ரவி தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்துவா கருத்துகளையும்,  ஆளும் அரசை விமர்சித்தும்  எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்சித்திருந்தார். பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகத் தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது. 

 

மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரங்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர்களுக்குத்தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும். மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்த நாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை.

 

பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேருரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார். இங்குதான் ஆளுநர் ஆர்.என். ரவி ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும்; சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துப்போக வேண்டும். அதனாலும் கால விரயம் ஏற்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள்  சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என். ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன.

 

பல்கலைக்கழகங்கள் தரும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் ஆறு மாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும். இது குறித்து நான் ஏப்ரல் 1 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாகப் பேட்டி அளித்திருந்தேன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.