முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு பெருமை சேர்க்கும் விதமாக சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கு பள்ளி முதல்வர் திலகம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை வெண்ணிலா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் இராதாகிருஷ்ணனின் புகழை பறைசாற்றும் வண்ணம் மாணவர்களின் பேச்சுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு பூங்கொத்தும், இனிப்பும் கொடுத்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய பள்ளி முதல்வர் திலகம், “இங்கு பயிலும் மாணவர்கள் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, விஞ்ஞானியாகவோ, வேலை பார்த்தாலும் ஆசிரியர் மட்டும் பள்ளியில் ஓய்வு பெறும் வரை மாற்றம் இல்லாமல் ஆசிரியர் பணியை செய்து வருகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு பின்னர் இந்தியாவே போற்றும் பெருமை பெற்ற முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களை தங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும்” என்றார். நிறைவாக பள்ளி உடற்கல்வி இயக்குநர் அசோக் நன்றி கூறினார்.