Skip to main content

''என் சாவிலாவது ஒன்று சேருங்கள்...!'' பிரிந்து வாழும் பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்!!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

 Student who lost his life for his parents who are living apart !!

 

நாமக்கல் அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைப்பதற்காக தன் உயிரையே பள்ளி மாணவன் மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி மேகலா. இவர்களுடைய மகன் தருண் (17). நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ராஜபாளையம் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். 

 

சிறுவனின் தாய், தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயார், அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். தருண், தந்தையுடன் வசித்து வந்தார். பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்வதைக் கண்டு அடிக்கடி தனது நண்பர்களுடன் சிறுவன் புலம்பி வந்துள்ளார். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பெற்றோரின் நிலையை எண்ணி தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். 

 

இந்த நிலையில் தருண், திங்கள்கிழமை (மே 16) இரவு வழக்கம்போல் தனது அறைக்குள் தூங்கச் சென்றார். மறுநாள் காலை விடிந்த பிறகு நீண்ட நேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை கதவை திறக்க முயன்றார். உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கே தருண், தூக்கில் சடலமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 


இதுகுறித்து சேந்தமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை நடத்தினர். அந்த அறையில் இருந்து தருண் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். 


அந்தக் கடிதத்தில், ''என்னுடைய சாவிலாவது தாய், தந்தை நீங்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும். அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன்'' என உருக்கமாக எழுதி இருந்தான். 


பிரிந்த பெற்றோர் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.