Skip to main content

தலைமுடியை வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வரச் சொன்னதால் மாணவர் தற்கொலை?

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Student lost their life because he was told to come to school with his hair cut

 

சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் சிகை அலங்காரம் என்ற பெயரில் பலவிதமாக முடிவெட்டி வருகின்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இதுபோன்ற மாடலாக சிகை அலங்காரம் செய்து வருவதை தடுத்து வருவதுடன் சிகை அலங்காரம் செய்யும் கடைகளிலும் பள்ளி மாணவர்களுக்கு இது போல மாடலாக முடி வெட்டக் கூடாது என்றும் கூறி உள்ளனர். ஆனாலும் மாணவர்கள் தலைமுடியை மாடலாக வெட்டி வருவது குறைந்தபாடில்லை. இப்படியான சிகை அலங்காரம் வேண்டாம் என்று ஆசிரியர் சொன்னதால் மாணவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மச்சுவாடி முன்மாதிரிப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று தேர்வு எழுத வந்த போது அவரது தலைமுடி மாடலாக இருப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமுடியை வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வா என்று திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

 

காலையில் பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் தேடி வந்த நிலையில் மாணவன் காலையிலேயே முடிவெட்டி வரச் சொல்லி திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர். தொடர்ந்து மாணவனை தேடிய போது பள்ளி அருகிலேயே உள்ள ஒரு மரத்தில் சடலமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த கணேஷ் நகர் போலிசார் மாணவன் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் இன்று காலை மாணவனின் உறவினர்கள், சக மாணவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு பள்ளியைவிட்டு வெளியே அனுப்பிய தகவலை மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.

 

தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். விசாரணைக்குப் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவர்கள் தற்கொலை வரை செல்லும் அளவிற்கு அவர்களின் மனநிலை உள்ளது. இதனை மாற்ற ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் மனநிலையை சரி செய்யும்விதமாக மாதம் தோறும் மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.

 

அதே போல முதலில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி மாணவர்களின் ஒழுக்கம், சிகை அலங்காரம், மனநிலை பற்றியெல்லாம் ஆலோசிக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பாத நிலை ஏற்படுவதுடன் மாணவர்கள் சாதாரணமாக விபரீத முடிவுகள் எடுப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.