Skip to main content

இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும்! -புஷ்பாஞ்சலி கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்!

Published on 04/10/2020 | Edited on 04/10/2020
struggle in sivakasi

 

சிவகாசி சிவன் கோவிலுக்கு முன்பாக, விருதுநகர் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பில், முப்பெரும் தலைவர்களுக்கு புஷ்பாஞ்சலி என்ற பெயரில், மறைந்த ராமகிருஷ்ணன், ராமகோபாலன், வீரபாகு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தினார்கள்.

கைகளில் கொடிகளை ஏந்தியவர்களிடையே, விஸ்வ இந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக் பேசும்போது, அமரர்கள் ஆகிவிட்ட மூவரின் தியாகத்தை எடுத்துரைத்துவிட்டு, “இந்திய நாட்டை இந்தியர்களே ஆளவேண்டும்.” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அஞ்சலி கூட்டம் முடிந்தவுடன்,  ‘தேசிய கல்விக் கொள்கை – 2020, அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்’ என்ற தலைப்பில் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பரும் சீதாவும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது’ - விஷ்வ இந்து பரிஷத்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 Vishwa Hindu Parishad petitioned Akbar and Sita lionsshould not be in the same place

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால், அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வருகிற 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

Next Story

பாலியல் காட்சியில் பகவத்கீதை வசனம்? - நோலனை சீண்டும் இந்துத்துவ அமைப்புகள்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Christopher Nolan Oppenheimer Bhagavad Gita issue

 

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி வெளியான படம் 'ஓப்பன்ஹெய்மர்'. இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அணு ஆயுத சோதனை காட்சி இடம்பெறுவதால் உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு தத்ரூபமாகப் படமெடுத்துள்ளது படக்குழு. அதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 50 கோடியும் உலகம் முழுவதும் 174 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெரும் ஒரு காட்சி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில், "இந்த உலகத்தை அழிப்பவன் நான்" என்று கதாநாயகன் கூறுகிறார். இந்த வசனம் பகவத்கீதையில் இடம்பெறுவதாகக் கூறி, முகம் சுளிக்கும் காட்சியில் இதைப் பயன்படுத்தி இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்திய தகவல் ஆணையர் உதய் மஹூர்கர், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு ட்விட்டரில் ஒரு பதிவு பகிர்ந்துள்ளார், அதில், "ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையில் இந்த தேவையற்ற காட்சியின் பின்னால் உள்ள உந்துதல் மற்றும் லாஜிக் எங்களுக்குத் தெரியாது. ஆனால், இது பல கோடி இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்து சமூகத்தின் மீது போர் தொடுப்பதற்குச் சமம். எனவே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை நீக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

 

விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர், முதல் முறையாக அணுகுண்டு வெடிப்பை சோதித்த பின்பு, "இந்து இதிகாசமான பகவத்கீதையில் வரும் வரிகளை நினைவுபடுத்திக்கொண்டேன். இளவரசர் அர்ஜுனன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் என விஷ்ணு கூறுகிறார். அவரை ஈர்க்க, விஷ்ணு பல கைகளுடன் தோன்றி, 'நான் இப்பொழுது, உலகை அழிக்கக்கூடிய மரணம் ஆகிவிட்டேன்' எனக் கூறுகிறார்" என்று கவலையுடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தணிக்கை வாரிய குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் காட்சிகளை நீக்கத் தணிக்கை வாரிய குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.