Skip to main content

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தி எதிர்ப்பு போராட்டம்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

struggle of imposition of Hindi continues from generation to generation

 

தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இந்தி திணிப்பு போராட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாட்டு மக்களின் செயல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான்  இந்தி மொழி என்றாலே தீப்பொறி பறக்கிறது. என்ன காரணம் என்றால் இதற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக் கடந்த 1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு ராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் என அறிவித்தார்.

 

அதற்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாத ராஜாஜி அரசு 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டது. இதனால் வெகுண்டெழுந்த தனித் தமிழ் இயக்கங்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் வீதிக்கு வீதி போராட்டத்தில்  குதித்தனர். இந்தப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற  இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அன்றைய  ராஜாஜி அரசு திணறிப் போனது. ஒரு கட்டத்தில், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக ராஜாஜி அரசு அறிவித்திருந்தது.

 

தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிரான மனநிலை பல மாநிலங்களில் நிலவி வந்தது. ஆனால், இத்தகைய போராட்டங்கள் அன்றோடு முடியவில்லை. தற்போது வரை தொடர்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த மூத்த திமுக தொண்டர் தங்கவேல் கடந்த 26 ஆம் தேதி தீக்குளித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

அதைத்தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் தமிழ் மொழியை மறைத்து அதன் மேல் இந்தி எழுத்தால் 'சகயோக்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான  வழி என்ற அறிவிப்பு பலகை இந்தியில் திவ்யாங்ஜன் என எழுதப்பட்டிருந்தது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அந்த ஸ்டிக்கர்களை அதிகாரிகள் அகற்றினர்.

 

தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.