
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டும்; 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத ஜனநாயக விரோத கொள்கைகளைக் கண்டித்தும் மத்திய தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவர் சங்கமேஸ்வரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தலைமை தபால் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காட்டுமன்னார்கோவிலில் விதொச மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் வட்டப் பகுதிகளில் 7 இடங்களில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் வெற்றி வீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புவனகிரியில் விதொச ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் பின்னலூரில், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.