தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையில் சிறைபிடித்து வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே, 2 படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளனர். கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்தியதாகவும் படகுகளை மோதவைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ளனர்.