![Special CPCID police who have gone to Koda Nadu!](http://image.nakkheeran.in/cdn/farfuture/4vBUEJyI2cukIiGphd2vQX2hceLrL71v4xZyFg7U5H8/1666689979/sites/default/files/inline-images/th_3393.jpg)
நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், உதகை மண்டலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்று நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கும் தகவலைத் தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டிற்குள் சென்று விசாரணை நடத்தவிருப்பதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மூன்று வாகனங்களில் கோவையில் இருந்து கிளம்பிய சிறப்பு சி.பி.சி.ஐ.டி புலனாய்வு போலீஸார் கோடநாடு எஸ்டேட்டிற்கு சென்றுள்ளனர்.