Skip to main content

திருமணத்தை மீறிய உறவில் மனைவி; மாமியாரைக் கொன்ற மருமகன்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
 son-in-law who incident the mother-in-law

கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேக். இவருக்கும் வேண்பாக்கம் அருகே உள்ள பள்ளம் பகுதியைச் சேர்ந்த லதா(40) என்பவரது மகள் சௌமியா(22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் விவேக் - சௌமியா இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த தகராறு உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த ஒரு ஆண்டாகக் கணவனைப் பிரிந்து தாய் லதா வீட்டில் சௌமியா வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தாய் வீட்டில் வசிக்கும் சௌமியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை அவரது தாய் லதா கண்டுகொள்ளவில்லை என்றும்  கூறப்படுகிறது. மேலும் வெளி ஊருக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சௌமியா தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கணவர் விவேக்கிற்கு தெரியவர, ஆத்திரத்தில் மாமியார் லதா வீட்டிற்கு வந்து சௌமியா எங்கே என்று கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மருமகன் விவேக்கிற்கும், மாமியார் லதாவிற்கும் வாக்குவாதம் முற்றியதாகத் தெரிகிறது. பின்னர் ஆத்திரமடைந்த விவேக் மாமியாரைத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின்னர் லதா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் லதாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் லதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்