Skip to main content

''இதனால் எந்த விதமான அச்சமும் தேவையில்லை'' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

dmk

 

'மின் இணைப்புடன் ஆதார் கார்டு இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது' என்பது தவறான தகவல் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

நாளை மீண்டும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய இருக்கும் நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''வரும் நாட்களில் மழை பாதிப்பு அதிகம் இருந்தாலும் மின் வழங்கல் சீராக இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது. ஒருவர் மூன்று இணைப்பு வைத்திருந்தாலும், ஐந்து இணைப்பு வைத்திருந்தாலும் ஆதார் இணைத்துவிட்டால் நூறு யூனிட் மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கும் என்றும் மீதியெல்லாம் பில் வந்து விடும் என்றும் பரவி வரும் தகவல் பொய்யானது.

 

பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் மட்டத்தில் முதலில் விழிப்புடன் இருக்க வேண்டும். இதில் முதலில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஆதார் இணைக்கப்படுவதற்குக் காரணம் எவ்வளவு இணைப்பு? யார் யார் பெயரில் இணைப்பு இருக்கிறது? எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது? என்பதற்கான எந்த டேட்டாசும் நம்மிடம் கிடையாது. அரசு பொறுப்பேற்ற பொழுது மொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் இணைப்புகளுக்கான தரவுகள்தான் இருந்தது. அது இப்பொழுது மூன்று கோடி இணைப்புகளை நெருங்கி தரவுகளை வாங்கி இருக்கிறோம். எவ்வளவு உற்பத்தி செய்கிறோம்? எவ்வளவு கொள்முதல் செய்கிறோம்? எவ்வளவு பில்லிங் செய்கிறோம் என்பதை எடுக்க வேண்டும் அதற்காகத்தான் இணைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். இதனால் எந்த விதமான அச்சமும் தேவையில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.