Skip to main content

உணவக உரிமையாளர் கொலை வழக்கு; குற்றவாளியை கண்டுபிடித்த மோப்ப நாய்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Sniffer dog nabs accused in dhaba restaurant owner case

 

சேலம் அருகே தாபா உணவக உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளியை, காவல்துறை மோப்ப நாய் மேகா கவ்விப்பிடித்து காவல்துறை வலையில் சிக்க வைத்த சம்பவம் பலருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.  

 

சேலம் மாவட்டம் அரியானூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). அதே பகுதியில் புதிதாக தாபா உணவகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், நவ. 24ம் தேதி அதிகாலை அந்தக் கடையின் உள்ளே கந்தசாமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

 

தகவல் அறிந்த சேலம் புறநகர் டிஎஸ்பி தையல்நாயகி, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் (24) என்ற இளைஞர் இந்த உணவகத்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். அவர்தான் கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது.  

 

தாபா கடையில் தற்போது மேற்கூரை, உள் அலங்காரம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் ஜோசப்பும் ஈடுபட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு கந்தசாமியும், ஜோசப்பும் கடையிலேயே படுத்துக்கொண்டனர். அப்போதுதான் இந்தக் கொலை நடந்துள்ளது. கந்தசாமியைக் கொன்றபோது ஜோசப்பின் சட்டைத்துணியில் ரத்தம் தெறித்துள்ளது. இதனால் அவர் ரத்தக்கறை படிந்த சட்டையைக் கழற்றி தண்ணீரில் அலசி, அங்கிருந்த கொடி கயிற்றில் உலரப் போட்டுவிட்டு, வேறு சட்டை அணிந்து கொண்டு தப்பி ஓடியிருப்பது தெரியவந்தது.  

 

தனிப்படை காவல்துறையினர் கொலையாளியை ஒருபுறம் தேடி வந்த நிலையில், மற்றொருபுறம் காவல்துறை மோப்ப நாய் மேகாவையும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர். கொடி கயிற்றில் உலர்ந்து கொண்டிருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை நாய் மேகாவிடம் காட்டி அதன் பயிற்சியாளர்கள் மோப்பம் பிடிக்கச் செய்தனர். அதையடுத்து மேகா கொலையாளி சென்ற திசையை நோக்கி ஓடியது.  கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள அரியானூர் பேருந்து நிறுத்தம் பகுதிக்குச் சென்று நின்றது. 1008 லிங்கங்கள் உள்ள கோயில் பகுதிக்கு ஓடிச்சென்ற மோப்ப நாய் மேகா, அங்கிருந்த புதருக்குள் ஆவேசமாகப் பாய்ந்தது.  

 

அந்த நாயை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர், புதர் மறைவில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அந்த நபர்தான் கந்தசாமி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜோசப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். கைச்செலவுக்கு பணம் இல்லாததால், தாபா உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மோட்டாரை திருடிச்சென்று, அதை விற்றுவிட்டு சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றிடலாம் என்று இருந்தேன். மோட்டாரை திருடும்போது கந்தசாமி பார்த்துவிட்டார். அவர் சத்தம் போட்டதால், ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  

 

கைதான அவரை காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜோசப்பை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  கொலையாளியை பிடிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த மோப்ப நாய் மேகாவையும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். அதற்கு பயிற்சி அளித்த காவல்துறை பயிற்சியாளர் எஸ்.ஐ. சக்திவேல் மற்றும் காவலர்களையும், குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல்துறையினரையும் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.  

 

திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களின் போது, வழக்கமாக காவல்துறை மோப்ப நாய் குற்றவாளிகளைத் தேடி ஓடிச்சென்று ஓரிடத்தில் நின்று கொள்ளும். மோப்ப நாய் மூலம் குற்றவாளிகள் பிடிபடும் சம்பவம் என்பது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.  

 

இந்நிலையில், தாபா உரிமையாளர் கொலை வழக்கில் 1 கி.மீ. தூரம் ஓடிச்சென்று கொலையாளியை கவ்விப் பிடித்த மோப்ப நாய் மேகாவின் நுண்ணுணர்வு மிக்க பணி சேலம் மாவட்டக் காவல்துறையினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.