![a skeleton in a cesspool; A sensational incident unfolded by the boys who went to pick up the cricket ball](http://image.nakkheeran.in/cdn/farfuture/o1ZBYgOD3xfJCn_j3VnxilO9LzHXlJr7RejNcP6ADWU/1716882136/sites/default/files/inline-images/a71922.jpg)
மயிலாடுதுறையில் கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ளது செம்பதனிருப்பு கிராமம். இந்த பகுதியில் நடைபெற்ற நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் போது சில வீடுகள் இடிக்கப்பட்டது. இந்தநிலையில் சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட வீடு ஒன்றின் கழிவு நீர் தொட்டியில் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் சிறுவர்களின் கிரிக்கெட் பந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்துவிட்ட நிலையில், சிறுவர்கள் பந்தை எடுக்க முயன்றுள்ளனர். அப்பொழுது கழிவுநீர் தொட்டியில் எலும்புக் கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலும்பு கூட்டை பற்றி தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பெண்ணின் எலும்புக் கூடு என்று தெரியவந்துள்ளது. எலும்புக் கூடாக கிடந்த பெண் யார்? கொலை செய்யப்பட்டு பெண் கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.