Skip to main content

பஞ்சத்தால் கஞ்சித்தொட்டி! -பட்டாசுத் தொழிலாளர்களின் கையறுநிலை!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
k

 

அரைசாண் வயிற்றை உணவால் நிரப்பினால்தான் மனிதன் உயிர் வாழமுடியும். வறுமை, வேலையின்மை, பிழைப்பதற்கு வழியில்லாமை என ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளானால், உறவினர்களோ, நண்பர்களோ உதவுவர். பல குடும்பங்களுக்கும் இதே நிலைமை என்றால், அந்தப் பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து உணவு வழங்குவர். ஒரு கிராமம் பாதிக்கப்பட்டிருந்தால், ஊர்கூடி கஞ்சி காய்ச்சி ஊற்றி, அம்மக்களின் பசியைப் போக்குவர். இது, ஒருவேளை கஞ்சியாவது அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடு ஆகும்.  

 

k

 

1780-இல் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுவதும் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1876-லிருந்து 1878 வரையிலும் பெரும்பஞ்சம் சென்னை மாகாணத்தைப் பீடித்திருந்தது. இப்பஞ்சம் மைசூர், பம்பாய், ஹைதராபாத் வரைக்கும் பரவியது. வட இந்தியாவின் சில பகுதிகளும் தப்பவில்லை. அதனால், அந்த இரு ஆண்டுகளில் 1 கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்ததாகப்  பதறவைக்கிறது புள்ளிவிபரம்.  

 

k

 

பசி, பட்டினி, பஞ்சம், கஞ்சித்தொட்டி என அந்தக்கால அவலத்தை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? வேலை காலி இல்லை என்ற போர்டை தமிழகத்தில் அத்தனை ஊர்களிலும் தொழிற்சாலைகளும், அலுவலகங்களும்   தொங்கவிட்டுக் கொண்டிருந்த காலத்தில், வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டு வைத்துத் தொழிலாளர்களை வரவேற்ற ஒரே ஊர், கடும் உழைப்பால் குட்டி ஜப்பான் என்று பெயரெடுத்த சிவகாசி. இன்றோ, அந்த சிவகாசிக்கே பெரும் சோதனை. பல இடங்களிலும் கஞ்சித்தொட்டி திறந்து, வேலையின்றித் தவிக்கும் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு கஞ்சி ஊற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

 

k

 

பட்டாசுத் தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பை பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட பல ஊர்களிலும் இயங்கிவந்த 1070 பட்டாசு ஆலைகள், கடந்த நவம்பர் 12-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். பெருமளவில் விருதுநகரில் திரண்டு மனு கொடுத்தும்,  மத்திய அரசோ, மாநில அரசோ தலையிட்டு, உடனடியாகத் தீர்வு காணவில்லை. அதனால், ஒருவேளை உணவுக்கே பட்டாசுத் தொழிலாளர்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வலியுறுத்தியும், வேலையில்லா காலத்துக்கு பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டியும், இன்று சிவகாசியின் பல பகுதிகளிலும் கஞ்சித்தொட்டி திறந்து போராடத் துவங்கியிருக்கின்றனர். 

 

k

 

வெடிகள் மூலம் வானத்தை அண்ணாந்து பார்க்கவைத்து உலகத்துக்கே  வேடிக்கை காட்டியவர்கள்  சிவகாசி மக்கள். இன்றோ,  வேலை இழப்பினால் பசி, பட்டினியால் வாடி, மற்றவர்களின்  பரிதாபப் பார்வைக்கு ஆளாகியிருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டம் நடத்திய விவசாயிகளை துரத்தி துரத்தி தடியடி நடத்திய கடலூர் போலீஸ்!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
p

 

காவிரி நீரை கடலுக்கு அனுப்பியது, குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடுகளை தட்டிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களை காவல்துறையினர் துரத்தி துரத்தி தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.

 

                கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரிதண்ணீரை கடைமடைக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும் , காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பாசனவாய்க்கால்வாய்களை குடிமராமத்து பணிகளில்  முழுமையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதை தட்டிகேட்டு சிதம்பரம் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

 

இதனைதொடர்ந்து திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை கோஷம் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

 

p

 

 பேரணியில் வந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்கள்.  இதனால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சிவராமன்  மற்றும் காவல்துறையினர் தடியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் தாக்குதலுக்கு பயந்து அங்குமிங்கும் ஓடினார்கள். ஓடியவர்களையும் விடாமல் குற்றவாளிகளை துரத்துவது போல் காவல் துறையினர் துரத்தி துரத்தி தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.

 

காவல்துறையினர் விவசாய சங்க தலைவர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்களை சட்டையை பிடித்து தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்கள். இதனால் காவல்துறையினருக்கும் விவசாய சங்க தலைவர்களுக்கும் கடுமையன வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

 

காவல்துறையினரின் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து கைது செய்யப்பட்ட விவசாய சங்கதலைவர்கள் மற்றும் விவசாயிகள் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் உன்னாவிரதத்தை கைவிட்டனர். மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.