Skip to main content

அரசியல் பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Shocking information released during the investigation

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்துவந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தார். வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக செயல்பட்டுவந்தார். வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்று தொழுகை முடித்துவிட்டு, தனது 7 வயது குழந்தையுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சாலையில் ஓட ஓட விரட்டி சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர். 

 

வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைக் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகில் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன, பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), வேலூர் எஸ்.பி. செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.  

 

Shocking information released during the investigation

 

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதைக் கண்ட போலீசார், அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, வாணியம்பாடியில் கொலை செய்தவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். தனது கஞ்சா விற்பனையை போலீசாருக்கு காட்டிக்கொடுத்ததால் கோபமான இம்தியாஸ், வசீம் அக்ரமை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

அவர்கள் தந்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தியைக் கைப்பற்றினர். அதோடு 8 கிலோ கஞ்சா, 10 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கார் ஒட்டுநர் உட்பட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். வாணியம்பாடியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமலிருக்க வேலூர் டி.ஐ.ஜி பாபு தலைமையில் 2 எஸ்.பிகள், 1 ஏ.டி.எஸ்.பி, 6 டி.எஸ்.பிக்கள், 15 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.