Skip to main content

நகைக்காக நடந்த கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Shocking confession released during police investigation

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது துலுக்கா நத்தம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது முத்தம்மாள். இவர் கூடையில் மீன் கருவாடு சுமந்து கொண்டு சென்று ஊர் ஊராகசென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி மீன், கருவாடு விற்கச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் முத்தம்மாளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி பாக்கம் கிராமத்தில் உள்ள ஒருகரும்பு வயலில் முத்தம்மாள் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரபு, பிரேம் குமார், கணேசன், பிரகாஷ் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

அதன்படி தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 22 வயது விநாயகம் என்ற இளைஞர் கிராம நிர்வாக அலுவலர் பாலலட்சுமி முன்பு சரணடைந்து முத்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரிடம் விநாயகம் அளித்த வாக்குமூலத்தில், “விவசாய டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறேன். கரும்பு தோட்டத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் மூலம் லோடு ஓட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகைக்கும் பழக்கம், ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் காரணமாக எனக்கு கடன் அதிகமாக இருந்தது. கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது முத்தம்மாள் கழுத்து நிறைய நகைகளுடன் ஊர் ஊராக கருவாடு விற்க செல்வது நினைவுக்கு வந்தது.

 

மேலும் எனக்கு முத்தம்மாளை நன்றாக தெரியும். அவர் பல முறை  கழுத்து நிறைய நகை அணிந்து கொண்டு வந்ததை பார்த்தேன். அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். ஏற்கனவே சிலமுறை வியாபாரம் முடிந்து திரும்பும் முத்தம்மாளை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது ஊரில் விட்டுள்ளேன். எனவே அவரிடம் உள்ள நகைகளை பறிக்க முடிவு செய்தேன். அதன்படி கடந்த 11ஆம் தேதி அதிகாலை நிறைய மது குடித்தேன். இதனால் போதை தலைக்கேறியது பிற்பகல் 2 மணி அளவில் முத்தம்மாளை தேடி சென்று சந்தித்தேன். அவரிடம் நான் வேலை செய்யும் செங்கல் சூளையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மொத்தமாக கருவாடு வேண்டும் என்று கூறினேன். அவரும் அதை நம்பி அதிக அளவு கூடையில் கருவாடு  நிரப்பிக்கொண்டு என்னுடன் புறப்பட்டார். அப்படி அழைத்துச் செல்லும்போது குறுக்கு வழியாக சென்றால் செங்கல் சூளைக்கு சீக்கிரம் செல்லலாம் என்று கூறி அவரை கரும்புத் தோட்டத்தின் வழியாக அழைத்துச் சென்றேன்.

 

அப்படி செல்லும்போது கரும்பு தோட்டத்தில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு முத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொத்தாகப் பிடித்து இழுத்தேன். அவர் கத்தி கூச்சல் போட்டார் அவரது சேலை முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்த நகைகள், கொலுசு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் தப்பினேன். அதில் சில நகைகள் எங்கள் வீட்டில் பதுக்கி வைத்தேன். கொலை செய்த பயம் காரணமாக அதிக அளவில் குடித்தேன். இருப்பினும் அவரை கொலை செய்த பயம் அதிகரித்தது. எங்கள் தெருவில் உள்ள எனது நண்பர் சதீஷ்குமாரை சந்தித்து நடந்த சம்பவத்தைக் கூறினேன். மீதம் இருந்த நகைகளை அவரிடம் கொடுத்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன்.

 

அவரும் உதவுவதாக கூறினார். அதன்பிறகு மூதாட்டி உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் அந்த உடல் மீது இரசாயனத் கரைசலை ஊற்றினேன். அதனால் 15 நாட்கள் கடந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனிமேல் தப்பிவிடலாம் என எண்ணினேன் ஆனாலும் போலீசார் என்னை நெருங்கவே கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்”. இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளி சதீஷ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து வெள்ளி கொலுசுகள் நகை பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.