Skip to main content

நகைக்காக நடந்த கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Shocking confession released during police investigation

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது துலுக்கா நத்தம் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது முத்தம்மாள். இவர் கூடையில் மீன் கருவாடு சுமந்து கொண்டு சென்று ஊர் ஊராகசென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி மீன், கருவாடு விற்கச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் முத்தம்மாளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி பாக்கம் கிராமத்தில் உள்ள ஒருகரும்பு வயலில் முத்தம்மாள் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரபு, பிரேம் குமார், கணேசன், பிரகாஷ் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

அதன்படி தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 22 வயது விநாயகம் என்ற இளைஞர் கிராம நிர்வாக அலுவலர் பாலலட்சுமி முன்பு சரணடைந்து முத்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரிடம் விநாயகம் அளித்த வாக்குமூலத்தில், “விவசாய டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறேன். கரும்பு தோட்டத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் மூலம் லோடு ஓட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகைக்கும் பழக்கம், ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் காரணமாக எனக்கு கடன் அதிகமாக இருந்தது. கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது முத்தம்மாள் கழுத்து நிறைய நகைகளுடன் ஊர் ஊராக கருவாடு விற்க செல்வது நினைவுக்கு வந்தது.

 

மேலும் எனக்கு முத்தம்மாளை நன்றாக தெரியும். அவர் பல முறை  கழுத்து நிறைய நகை அணிந்து கொண்டு வந்ததை பார்த்தேன். அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். ஏற்கனவே சிலமுறை வியாபாரம் முடிந்து திரும்பும் முத்தம்மாளை எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவரது ஊரில் விட்டுள்ளேன். எனவே அவரிடம் உள்ள நகைகளை பறிக்க முடிவு செய்தேன். அதன்படி கடந்த 11ஆம் தேதி அதிகாலை நிறைய மது குடித்தேன். இதனால் போதை தலைக்கேறியது பிற்பகல் 2 மணி அளவில் முத்தம்மாளை தேடி சென்று சந்தித்தேன். அவரிடம் நான் வேலை செய்யும் செங்கல் சூளையில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மொத்தமாக கருவாடு வேண்டும் என்று கூறினேன். அவரும் அதை நம்பி அதிக அளவு கூடையில் கருவாடு  நிரப்பிக்கொண்டு என்னுடன் புறப்பட்டார். அப்படி அழைத்துச் செல்லும்போது குறுக்கு வழியாக சென்றால் செங்கல் சூளைக்கு சீக்கிரம் செல்லலாம் என்று கூறி அவரை கரும்புத் தோட்டத்தின் வழியாக அழைத்துச் சென்றேன்.

 

அப்படி செல்லும்போது கரும்பு தோட்டத்தில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு முத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொத்தாகப் பிடித்து இழுத்தேன். அவர் கத்தி கூச்சல் போட்டார் அவரது சேலை முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்த நகைகள், கொலுசு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் தப்பினேன். அதில் சில நகைகள் எங்கள் வீட்டில் பதுக்கி வைத்தேன். கொலை செய்த பயம் காரணமாக அதிக அளவில் குடித்தேன். இருப்பினும் அவரை கொலை செய்த பயம் அதிகரித்தது. எங்கள் தெருவில் உள்ள எனது நண்பர் சதீஷ்குமாரை சந்தித்து நடந்த சம்பவத்தைக் கூறினேன். மீதம் இருந்த நகைகளை அவரிடம் கொடுத்து எனக்கு உதவி செய்யுமாறு கேட்டேன்.

 

அவரும் உதவுவதாக கூறினார். அதன்பிறகு மூதாட்டி உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் அந்த உடல் மீது இரசாயனத் கரைசலை ஊற்றினேன். அதனால் 15 நாட்கள் கடந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனிமேல் தப்பிவிடலாம் என எண்ணினேன் ஆனாலும் போலீசார் என்னை நெருங்கவே கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன்”. இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளி சதீஷ் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து வெள்ளி கொலுசுகள் நகை பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நகை பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.