Skip to main content

"மூன்று வாரத்துக்கு முன்னாடி துறுதுறுன்னு இருந்தான்; ஆனால், இப்ப..." மகனின் சிகிச்சைக்காக தாய் நடத்தும் பாசப்போராட்டம்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Tejveer

 

அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவுங்கள் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மத்திய ஆப்ரிக்காவில் பரவலாகக் காணப்படும், குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய 'பர்கிட் லிம்போமா' எனும் புற்றுநோய், இந்தியாவில் மிக அரிதானது. இத்தகைய சூழலில், அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் தேஜ்வீர் யாரென விசாரிக்கத் தொடங்கினோம். முடிவில், அவர் சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரின் இளைய மகன் எனத் தெரியவந்தது. தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக உதவி கோரி பதிவிட்டிருந்த ஷர்மிளாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்தோம்.

 

"மூனு வாரத்துக்கு முன்னாடிவரை ஓடிஆடி விளையாடிட்டு நல்லாதான் சார் இருந்தான்... கண்ண மூடி திறந்த மாதிரிதான் இருக்கு... அதுக்குள்ள எல்லாம் இப்படி ஆகிருச்சு..." என தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கிய ஷர்மிளாவின் கண்களில் கண்ணீர் பொங்கிவழிந்தது. ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி அவரை ஆசுவாசப்படுத்தினோம். மீண்டும் பேசத்தொடங்கிய ஷர்மிளா, அனைத்தையும் விளக்கிக் கூறினார்.

 

"நான் ஒரு கல்லூரியில் ப்ரொபசரா வேலை பார்க்கிறேன் சார். மொத்தம் எனக்கு ரெண்டு குழந்தைங்க. சின்னவன் தேஜ்வீர்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கான். மூன்று வாரத்துக்கு முன்னாடி வயிறும் நெஞ்சும் வலிக்குதுன்னு சொன்னான். நாங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தோம். இருந்தாலும், வயிறு வலி மட்டும் தொடர்ந்து இருந்துச்சு. பிறகு ஸ்கேன் பண்ணி பார்த்தா ரிப்போர்ட்ல கேன்சர்னு வந்துருச்சு. அதுவும் 'பர்கிட் லிம்போமா'னு சொல்லுற அரிய வகை ரத்த புற்றுநோயாம் சார். ஆப்ரிக்காவில்தான் இந்த நோய் அதிகமாக இருக்குதாம். இந்த நோய் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் போய்கிட்டிருக்குது. எதனால இந்த நோய் ஏற்படுதுன்னு இன்னைக்குவரை சைன்டிஸ்ட்டாலயே கண்டுபிடிக்க முடியல. என் பையனுக்கு இப்ப மூணாவது ஸ்டேஜ்ல இருக்குனு சொல்றாங்க. கீமோதெரபி சிகிச்சைதான் பண்ணப்போறோம். கல்லீரல், நுரையீரல் உட்பட நான்கு உறுப்புகளைப் பாதிச்சிருக்கு. ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு பத்து நாளுக்குமேல ஆகிருச்சு. எங்களோட சேவிங்ஸ் எல்லாம் இதுவரைக்கான ட்ரீட்மெண்ட்டுக்கு செலவு பண்ணிட்டோம். சிகிச்சைக்கு குறைந்தபட்சமே 25 லட்சத்திற்கும்மேல ஆகும்னு சொல்லிருக்காங்க. என்ன பண்றதுன்னு தெரியல. வேற எந்த ஆப்ஷனும் இல்லன்னு தெரிஞ்ச உடனேதான், மக்கள்கிட்ட உதவி கேட்ருக்கோம். நம்ம மக்கள் உதவுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..." எனக் கூறும்போதே மீண்டும் எமோஷனல் ஆனார் ஷர்மிளா.

 

அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கையில், சைகையால் அழைத்து தனக்கு வாந்தி வருவதாகத் தெரிவித்தான் தேஜ்வீர். வாந்தி எடுத்த பிறகு அவனுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுத்துவிட்டு மீண்டும் நம்மிடம் பேச வந்தார். மூச்சுவிட சற்று சிரமப்பட்ட சிறுவன் தேஜ்வீரின் அந்த நிலை நம்மை கண்கலங்க வைத்தது. புற்றுநோய்க்கு முந்தைய தேஜ்வீர் எப்படி எனக் கேட்டோம்.

 

"ரொம்ப துறுதுறுன்னு இருப்பான் சார். எல்லார்கிட்டயும் அன்பா பழகுவான். கிளாஸ்ல ரெண்டு பசங்களுக்கு இடையில பிரச்சனைனா இவன்தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பான். அவங்க மிஸ்கூட அதை ரொம்ப பெருமையா சொல்லிருக்காங்க. படிப்பு கொஞ்சம் சுமார்தான் சார். ஆனால், ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். கராத்தேல பிரௌன் பெல்ட்டெல்லாம் வாங்கிருக்கான். இந்தியாவுக்காக நான் ஒருநாள் ஒலிம்பிக்ல கராத்தே விளையாடுவேன்னு அடிக்கடி சொல்வான் சார். அவன் அப்படி சொல்லும்போதெல்லாம், "டேய் ஒலிம்பிக்ல கராத்தேயே கிடையாதுடா”ன்னு அவனோட அண்ணன் கிண்டல் பண்ணுவான். இந்த முறைதான் டோக்கியோ ஒலிம்பிக்ல முதன்முறையா கராத்தேவ சேர்த்தாங்க. அந்த விஷயம் தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டான். இப்ப அவனுக்கு 11 வயசுதான் ஆகுது. இன்னும் நாலு வருஷம் கழிச்சு ஏதாவது பெரிய கராத்தே அகாடெமில அவன சேர்த்துவிடலாம்னு நினைத்திருந்தோம்..." எனக் கூறிக்கொண்டே கராத்தே போட்டிகளில் தேஜ்வீர் வென்றபோது எடுத்த சில புகைப்படங்களை நம்மிடம் காட்டினார்.   

 

அவர் காட்டிய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அருகே படுத்திருந்த தேஜ்வீரின் தற்போதைய நிலையைப் பார்த்தபோது இந்தமுறை நாம் எமோஷனல் ஆகிவிட்டோம். நம்மை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக இந்த முறை ஷர்மிளா பேசத் தொடங்கினார். "ஸ்கூல்ல யாருக்காது பர்த்டேனு சாக்லேட் கொடுத்தாக்கூட வீட்டுல கொண்டுவந்து எனக்கு, அவங்க அப்பாக்கு, அவன் அண்ணனுக்கு என மூனு பேருக்கும் குடுத்துட்டுதான் சாப்பிடுவான் சார்..." என அவர் கூறிக்கொண்டு இருக்கையிலேயே மீண்டும் வாந்தி வருகிறது என சைகை காட்டி அழைத்த தேஜ்வீர், இந்த முறை நீண்ட நேரம் வாந்தி எடுத்தான்.

 

அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வந்து, "அடிக்கடி வாந்திதான் எடுத்துக்கிட்டே இருக்கான் சார். தொண்டையெல்லாம் இன்ஃபெக்சன் ஆகிருச்சு. கடைசி ரெண்டு நாளா பேசக்கூட முடியல. எல்லாத்தையும் சைகைலதான் சொல்றான். கீமோ பண்ணதுனால இந்த வீக்ல ஹெல்த் கண்டிஷன் இன்னும் கொஞ்சம் டவுன் ஆகும்னு சொல்லிருக்காங்க. ஏற்கனவே டவுன்லதான் இருக்கு... இன்னும் என்ன டவுன்னு எனக்குப் புரியல..." எனக் கூறிய ஷர்மிளாவின் குரலில் தாங்கொணாத் துயரமும் வேதனையும் நிரம்பியிருந்தன. 

 

காலம் செய்யும் கோலம் இத்தனை அபத்தமானதாகவா இருக்க வேண்டும்? வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் இளம் வயதில் பாதிக்கப்பட்ட மெஸ்ஸியும், சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ரொனால்டோவும் விளையாட்டு உலகத்தை இன்று ஆள்வதுபோல, சிறுவன் தேஜ்வீரும் நோயிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் பல படைக்க பிரார்த்திப்போம்.

 

சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட லிங்க்கில் சென்று நிதியளிக்கலாம். அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அவரது வங்கிக்கணக்கிலேயே நேரடியாக பணம் செலுத்தி உதவலாம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சிறுவன் தேஜ்வீரின் உடலில் உள்ள புற்றுசெல்களுக்கு எதிரான ஆயுதமாக செயல்படும்.

 

மேலதிக தகவல்களுக்கு, ஷர்மிளாவின் கணவரை தொடர்பு கொள்க - 9840880903

 

GPAY number- 9840880906.

Account number: 90928353883245
Account name: Ms Tejveer
IFSC code: IDFB0020101

Fundraiser link: https://www.impactguru.com/fundraiser/help-ms-tejveer-apl

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.