Skip to main content

வங்கியிலிருந்து தங்கக் கவசத்தை யார் எடுப்பார்கள்..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில்

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

Sellur Raju answered onMuthuramalinga Thevar issue

 

மருது சகோதரர்களின் 221வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது செய்தியாளர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் அணிய வேண்டிய தங்கக் கவசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தங்கக் கவசத்தை ஜெயலலிதா கொடுக்கும்போதே. இது அதிமுகவினுடையது என்றும், இதனை அதிமுகவின் பொருளாளரும், பசும்பொன்னாரின் நினைவு அறக்கட்டளையில் இருப்பவரும் இணைந்து இந்தத் தங்கக் கவசத்தை ஆண்டுதோறும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைமைதான் தொடர்ந்துவந்தது. ஆனால், 2017ல் இதேபோல், கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் உரிமை கொண்டாடினார்கள். எடப்பாடி முதலமைச்சராக இருந்த அந்த நேரத்தில் வீணாக சர்ச்சை வேண்டாம் என்று, மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்துகொடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் பெற்று அதனை அணிவித்தனர். 

 

தற்போது ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து விலகியபிறகு அதிமுகவின் பொதுக்குழுவால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அதிமுக கட்சி தொடர்பான பணபரிவர்தனையை இந்தியன் வங்கியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

மதுரையில் உள்ள இந்தியன் வங்கி தற்போதைய அதிமுக பொருளாளருக்கு முழுமையாக பாத்தியப்பட்டது. எனவே அவர் எடுக்கலாம் என ஆர்.பி.ஐ. விதிமுறைகளும், இந்திய அரசும் சொல்கிறது. எடப்பாடியால் அனுப்பிவைக்கப்பட்ட பொருளாளரும், அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதனும், மதுரை திருமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் நான் அனைவரும் சென்று வங்கியில் அதிமுகவின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என சொல்லியிருந்தோம். அவர்களும், ‘நீங்கள் எடுத்துகொள்ளலாம். முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளையில் இருந்துவந்து ஒருவர் கையெழுத்து போட்டால் போதும்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். 

 

அதேபோல், அதிமுகவில் உள்ள முக்குளத்தைச் சார்ந்த அனைத்து தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் என அனைத்து நிர்வாகிகளும் பசும்பொன்னுக்கு சென்று அங்கு அறக்கட்டளையில் விவரத்தை எடுத்து சொல்லி நீதிமன்ற தீர்ப்பையும் காட்டினோம். அவர்கள் நிச்சயம் வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

அதேசமயம், எங்களுக்கும் பல நெருக்கடிகள் உள்ளன. முக்கியமாக நீதிமன்றம் வரும் 26ம் தேதி கொடுக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து அனைத்தையும் நாங்கள் பின்பற்றுவோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று நடப்போம்” என்று தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.