Skip to main content

ஆயிரக்கணக்கில் சிக்கிய காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள்; கலக்கத்தில் விவசாயிகள்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Seizure of thousands of trapped expired pesticides

 

பல வருடங்களுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை காலாவதி தேதியை அழித்து புதிய தேதி அச்சிட்டு விற்பனை செய்ய வைத்திருந்த 1500 பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம் விவசாயிகளை கலக்கமடைய வைத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஒரு தென்னந்தோப்பு, ஒரு வீடு, ஒரு கடை என பல இடங்களில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கிவந்து, காலாவதி தேதியை அழித்து, புதிய தேதியை அச்சிட்டு உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் உள்ள வேளாண் பூச்சி மருந்துக்கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் கும்பல் செயல்படுவதாக, வேளாண்துறை மாவட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் நேரில் புகார் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் ரகசிய புகார் அளித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்கு உத்தரவிட்டு 10 நாட்களுக்கு பிறகு நடந்த சோதனையில் தான், இத்தனை காலாவதியான பூச்சி மருந்து பாட்டில்களை வேளாண்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

Seizure of thousands of trapped expired pesticides

 

செவ்வாய் கிழமை வேளாண் உதவி இயக்குநர்கள் திருவரங்குளம் வெற்றிவேல், அறந்தாங்கி பத்மபிரியா குழுவினர் கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் உள்ள விவசாயி வேம்பங்குடி மாதவன் தென்னந்தோப்பில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பல வகையான பூச்சி மருந்துகளை கைப்பற்றிய நிலையில், இது தென்னை மரங்களுக்கு தெளிக்க வாங்கி வைத்திருப்பதாக விவசாயி மாதவன் கூறியதையடுத்து சுமார் 200 காலாவதியான மருந்துப் பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றி கீரமங்கலம் வேளாண்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

 

புதன் கிழமை காலை கீரமங்கலம் காந்திஜி சாலையில் உள்ள ஐயப்பன் என்பவரின் பூச்சிமருந்துக்கடையில் வேளாண் உதவி இயக்குநர் வெற்றிவேல் தலைமையிலான வேளாண் அலுவலர் குழுவினர் கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகதாஸ், கீரமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், போலீசார் முன்னிலையில் பூட்டியிருந்த கடையை திறந்து சோதனை செய்த போது, 2015 முதல் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், காலாவதியாகாத தேதியுள்ள மருந்துகள், காலாவதியாகி டின்னர் வைத்து அழித்து புதிய காலாவதி தேதி அச்சிடப்பட்ட மருந்துகள் என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 1500 பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களையும், வேளாண்துறையில் விற்பனை செய்யும் விதை நெல், எள், உளுந்து பைகளும் கண்டறியப்பட்டது. மேலும் மருந்துப் பாட்டில்களில் காலாவதியான தேதி, விலை பட்டியலை அழிக்கும் டின்னர் (காலியான) பாட்டில்களும் அழிக்கப்பட்ட இடத்தில் புதிய தேதி, விலை அச்சிடும் கருப்பு மை பாட்டில் ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்தனர். காலாவதியான மருந்துகள் பற்றிய ஆய்வு நடத்தும் போது தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் மதியழகனும் வந்து ஆய்வு செய்து அதிர்ந்து போனார்.

 

Seizure of thousands of trapped expired pesticides

 

மொத்தமாக அனைத்து மருந்து பாட்டில்களும் தரம் பிரித்து மருந்தின் பெயர், அளவு, விலை, காலாவதி தேதி, மருந்து நிறுவனத்தின் பெயர், எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்த வேளாண்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட மருந்து உள்ளிட்ட பொருட்களை அட்டைப்பெட்டிகள், சாக்குப் பைகளில் அடைத்து கீரமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றனர்.

 

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதியான சுமார் 1500 மருந்துப்பாட்டில்களை வேளாண்துறை அதிகாரி கைப்பற்றிய சம்பவம் வேகமாக பரவியதால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் அனைத்து மருந்துக்கடைகளிலும், அதிகாரிகள் ஆய்வு செய்து இது போன்ற காலாவதியான மருந்துகள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களும் ஆய்வு செய்து காலாவதியான மருந்துகளுக்கு புதிய தேதிகள் மாற்றி இருந்தால், நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

 

Seizure of thousands of trapped expired pesticides

 

வேளாண்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் பற்றிய விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக கொடுத்த பிறகு, கைப்பற்றப்பட்ட மருந்து பாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நீதிமன்றத்தில் காலாவதியான மருந்துகளையும், காலாவதி தேதி, விலை அழிக்கப்பட்டு புதிய தேதி, விலை அச்சிடப்பட்டதையும் தெளிவாக ஆவணப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

 

ஒரே இடத்தில் இவ்வளவு காலாவதியான மருந்து பாட்டில்களை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றிய சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.