Skip to main content

"‘ஜெய் பீம்’ சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஞானவேல்" - சீமான்

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

kl


இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினார்கள். இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பாமக தரப்பு ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப்  பலரும் அறிக்கை வெளியிட்டுவந்தனர். 

 

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் நேற்று (21.11.2021) விளக்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடிகர் சூர்யா இதில் நடித்தார். காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகும் இதில் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என நம்பினேன். குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது எங்களின் நோக்கம் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் சூட்டிங்கின்போது எங்கள் கவனத்தில் பதியவில்லை. ‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது. இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது. தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன்பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்ற தெரிவித்திருந்தார். 

 

இவரின் விளக்கம் தொடர்பாக தற்போது இயக்குநரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " ‘ஜெய் பீம்’ தொடர்பாக தம்பி ஞானவேலின் கடிதம் கண்டேன். தாமதமாக வந்தாலும் மிகச் சரியாக தனது தரப்பு விளக்கத்தை அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும் விதமாக சமூக பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம் முறை வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.