திருச்சி தா.பேட்டை சின்ன சேலம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம்-சந்திரா ஆகியோரின் 17 வயது மகள், தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலுக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவிரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட அந்தச் சிறுமி, கோயிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சின்னசேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இளம்பெண் சடலம் ஒன்று மிதப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றினர். அது காணாமல் போன அந்த சிறுமி தான் என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலத்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.