Skip to main content

சவுக்கு சங்கர் வழக்கு; இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
savukku Shankar case; Two judges dissented

பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாகக் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தேனியில் காரில் 409 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து அவரது உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க தேனி போலீசார் கடந்த 20 ஆம் தேதி கோவை சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்து மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி 2 நாள் காவலில் எடுத்த தேனி போலீசார் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தர பிறப்பித்துள்ளார். அதேநேரம் சவுக்கு சங்கருடைய தாயார் கொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் நீதிபதி பாலாஜி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். கோவை சிறையில் இருக்கக்கூடிய சவுக்கு சங்கரைப் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அடுத்த கட்டமாக விசாரணை செய்வதற்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதற்குச் சென்னை நீதிமன்றத்தினுடைய பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு யார்? அந்த விசாரணை எப்போது நடைபெறும் என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்