Skip to main content

“தற்போது பதவியேற்ற அரசு சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாதது திருப்தி” - நீதிபதி 

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Satisfied that the incumbent Secretary of State has not replaced the Health Secretary

 

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள தேசிய நிபுணர் குழு பரிந்துரைகளை அளிக்கும்வரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் ஆகியவை கிடைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை என வெளியான செய்தி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.05.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், சுகாதாரத்துறையின் கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார். அவர், தமிழகத்தில் ஏற்கனவே 44 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு, அதில் 5,592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ளவை மே 15க்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார். பிரதமருக்கு கடிதம் எழுதிய பின், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தமிழகத்திற்கு தேவையான ஆளவு 475 டன்னாக உள்ளதால் இதுவும் பற்றாக்குறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

ஊரடங்கிற்குப் பிறகும் கரோனா பரவல் குறையாவிட்டால் மே மாத இறுதியில் ஆக்சிஜன் தேவை 800 டன்னாக இருக்கும் எனத் தெரிவித்தார் அரசு தலைமை வழக்கறிஞர். 3 லட்சத்து 50 ஆயிரம் குப்பி ரெம்டெசிவர் மருந்துகள் கோரிய நிலையில், 2.05 லட்சம் குப்பிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி மருந்தைப் பொறுத்தவரை 76.99 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு, 64.13 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.85 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சப்ளைக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், 5 லட்சம் டோஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Satisfied that the incumbent Secretary of State has not replaced the Health Secretary
                                                                சஞ்ஜிப் பானர்ஜி

 

நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து, ரெம்டெசிவிர் மருந்து சப்ளை தொடர்பாக பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்றம் தேசிய நிபுணர் குழுவை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையில் மே 15ஆம் தேதி முதல் 40  டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என விளக்கினார். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கரோனா பரவல் குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மாலா, அங்கு ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், படுக்கைகள், மருந்துகள் போதுமான அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் ஆர். ஸ்ரீதர், சி. கனகராஜ், எம்.எஸ். கிருஷ்ணன், கௌதம், பிரகாஷ், பி. வில்சன் ஆகியோர், “படுக்கை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்; புதுச்சேரியில் இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளதால், ஆரம்ப சுகாதார மையங்களைப் பயன்படுத்த வேண்டும்; முழு ஊரடங்கு சற்று நம்பிக்கை அளித்தாலும் பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தும் குழுக்களை மண்டல வாரியாக உருவாக்க வேண்டும்; முதல் அலையைப் போல கிருமிநாசினி பணிகள் நடைபெறவில்லை; ரெம்டிசிவிர், அசிலிசுமார் மருந்துகளைத் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்; 12 மாவட்டங்களில் சித்த முறை சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களைத் துவங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

 

இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர டெண்டர் கோரப்பட்ட நிலையில், எவரும் விண்ணப்பிக்காததால், டெண்டர் தேதி இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாக்டீரியாவுக்கு மட்டும் மருந்து தயாரிக்கப்படுவதால், அங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது” எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அரசு, சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றாமல் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி, தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.

 

மேலும், ராணுவ தளவாட ஆராய்ச்சி மையமான டி.ஆர்.டி.ஓ.வின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிந்துரை அளிக்கும்வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து, ரெம்டெசிவிர் மருந்துகள் சப்ளைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மூன்றாவது அலை தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், மருந்துகளை நேரடியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவித்து, விசாரணையை மே 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.