Skip to main content

முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரண உதவித்தொகை பெற அழைப்பு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

rupee


முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்கள் தமிழக அரசின் கரோனா நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
 


கரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டு உள்ளது என்றாலும், மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


நோய்த்தொற்று அபாயம் அதிகளவில் உள்ளதால் முடி திருத்தும் தொழில்களுக்கு மட்டும் இன்னும் முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, ஊரகப்பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.


தடை உத்தரவு காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இழந்து வாடும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது.


அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 28.83 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளில், இதுவரை 2,148 வியாபாரிகளிடம் வங்கிக் கணக்கு விவரம், அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு 1,000 ரூபாய் வீதம் நேரடியாக 21.48 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளது.
 


இந்நிலையில், முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரண்டு தவணைகளாக 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும், முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போல நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, மாநகரப் பகுதியில் உள்ள முடி திருத்தும் தொழிலில் ஈடுபடும் பதிவு பெறாத தொழிலாளர்கள் நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்டவர்களின் முடி திருத்தும் கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு உட்பட்ட மண்டல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனுவாகச் சமர்ப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


ஆகவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள முடிதிருத்தும் கடைகளில் பணிபுரியும், இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் கடைகள் அமைந்துள்ள மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தை வழங்கலாம். அனைத்து வேலை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம்.
 

http://onelink.to/nknapp


விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல், முடி திருத்துவோர் நல சங்கத்தின் உறுப்பினருக்கான அடையாள அட்டை நகல், கடைசியாக சந்தா தொகை செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகிய ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

 


உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், மாநகராட்சி அலுவலர்கள் தலத்தணிக்கை செய்து, தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்வர். அதன்மூலம், இதுவரை பதிவு பெறாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.