Skip to main content

சேலம் திருமணிமுத்தாறு இன்னும் 2 ஆண்டுகளில் மீட்கப்படும்; அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022
Salem's thirumanimuthaaru will be restored in 2 years; Minister Meiyanathan information!



கழிவுநீர் கலப்பால் மாசடைந்துள்ள சேலம் திருமணிமுத்தாறு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சனிக்கிழமை (ஜூலை 2), சேலம் உத்தமசோழபுரம் அருகே, திருமணிமுத்தாற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

 

''சேலம் திருமணிமுத்தாறு நிலையைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையைத் தருகிறது. சேலம் மாநகராட்சியின் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாலும், சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாலும் ஒட்டுமொத்தமாக திருமணிமுத்தாறு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த ஆற்றில் எந்த உயிரினமும் வாழ முடியாது. கழிவுநீர் கலந்ததால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால், நீர்வாழ் உயிரினங்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நதி கடந்து போகும் பாதையோரம் உள்ள மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நிலமும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி எல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சேலம் மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையமானது 98 எம்எல்டி திறன் கொண்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் வரைதான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆற்றில் கலப்பதாக சொல்கின்றனர். புதிதாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. சாயக்கழிவு நீர் கலப்பதில் இருந்து தடுத்து, திருமணிமுத்தாறு முழுமையாக மீட்டெடுக்கப்படும். இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி விட்டோம்.

 

கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள இடத்தில் மின்சார வசதி இல்லாவிட்டால் சோலார் பிளாண்ட் அமைக்கப்படும்.

 

சேலத்தில், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றியதாக இதுவரை 45 சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விதிகளை மீறிய சாய ஆலைகள், சலவைத் தொழிற்சாலைகளிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது என்பது, தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

குப்பைகளை எரிக்கக் கூடாது. பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியேறி, புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் 143 குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் தேக்கம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இவற்றில் 59 கிடங்குகளில் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்துக் கொட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 200 கோடி ரூபாய் சொத்துகள் உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளன. குப்பைகளை எந்தக் காரணம் கொண்டும் எரிக்கக் கூடாது. தரம் பிரித்துக் கொட்ட வேண்டும். ராணிப்பேட்டையில், மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

தமிழக முதல்வர் அறிவித்துள்ள, எனது குப்பை; எனது பெருமை திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்துக் கொட்ட வேண்டும்'' இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

 

ஆய்வின்போது, எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.