Skip to main content

சிறுமிகளிடம் வெச்சிக்காதீங்க! போக்சோ மட்டுமல்ல... குண்டாஸும் பாயும் -  எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் எச்சரிக்கை!!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Salem SP SriAbinav addressed press and warned youngsters

 

சிறுமிகள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் சட்டமும் பாயும் என்று சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் எச்சரித்துள்ளார்.


சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், கடந்த 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை தரப்பிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கள்ளச்சாராயம் ஒழிப்பு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

 

தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த ரவுடிகள் உருட்டு குமார், இளங்கோ, மகேந்திரன், ரஞ்சித்குமார், பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில், சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக இதுவரை 1,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இதுவரை 58 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர் ஒருவார காலத்திற்குள் அவர்களாகவே காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் வாயிலாக 21 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பெண்கள், உதவி மையத்திற்கு வந்துவிட்டால், அவர்களைத் திருப்பி அனுப்பாமல் வேறு துறை தொடர்பான கோரிக்கையாக இருந்தாலும் அம்மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறோம்.  

 

இளைஞர்கள், சிறு வயதில் காதலிப்பது தவறு என்பது தெரியாமல் காதலிக்கிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் 250 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது, சிறுமிகளைத் திருமணம் செய்வது ஆகியவை குற்றங்கள் ஆகும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ என்ற சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயவும் வாய்ப்புகள் உள்ளன.

 

குற்றங்களைக் கட்டுப்படுத்த, சேலம் மாவட்டத்தில் 665 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதேபோல் விரைவில் இ-பீட் முறை அமல்படுத்தப்பட உள்ளது.” இவ்வாறு எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.