Skip to main content

நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 


நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்து, விசாரணைக்கு ஆஜரான பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

p


சேலத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருக்கு சொந்தமாக தீவட்டிப்பட்டியில் ஒரு கிழங்கு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையை 6 பேர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை ஒப்பந்தத்தில் மோசடி நடந்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஆசைத்தம்பி சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 


அதன்பேரில் காவல்துறையில் புகாரில் கூறப்பட்டிருந்த 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஓமலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சேலம் மாவட்ட 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8, 2019) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. 


புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது இந்த வழக்கில் ஆஜராகி உள்ள 6 பேரில் புஷ்பா என்பவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி இருந்த பெண்ணின் பெயர் விவரங்களை கேட்டார். அப்போது அவர், சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த கவுரிசங்கர் மனைவி கார்த்திகா (43) என்பது தெரிய வந்தது. 


இதனால் நீதிமன்ற அரங்கத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆள்மாறாட்டம் செய்த கார்த்திகாவை நீதிமன்ற ஊழியர்கள் பிடித்துச் சென்று, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திகாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.