Skip to main content

காவலர்கள் மீது குவியும் புகார்கள்; அடுத்தடுத்து இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

salem police transferred to armed forces department

 

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இளைஞரிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு, உதவி செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்ட சிறப்பு எஸ்.ஐ ஒருவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் களரம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நள்ளிரவு தன் வீட்டு வழியாக ஒரு மூதாட்டி தடுமாறியபடி சென்றதைப் பார்த்தார். இதுகுறித்து அவர் உடனடியாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து, மூதாட்டிக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் சம்பவ இடத்திற்குச் சென்றார். திடீரென்று அவர் பிரபாகரனிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, ''ஏன் இரவு நேரத்தில் தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறாய்? நீயே அந்த மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்து  வீட்டில் விட்டுவிட்டு வந்துவிடு. அதன்பிறகு காவல் நிலையத்திற்கு வந்து கைப்பேசியை வாங்கிக்கொள்'' என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

 

அதற்கு பிரபாகரன், ''நானே மூதாட்டியை அவருடைய வீட்டில் சேர்த்து விடுகிறேன். ஆனால், என்னுடைய கைபேசியை கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், விடிய விடிய பிரபாகரன் தன் சொந்த பாதுகாப்பில் மூதாட்டியை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். மறுநாள் காலையில் பிரபாகரன், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். இதற்கிடையே, காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு உரிய முகவரியில் சேர்த்தனர். பணி நேரத்தில், உதவி கேட்ட பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாலும், கடமை தவறியதாலும் எஸ்எஸ்ஐ கலைச்செல்வனை உடனடியாக மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சிவக்குமாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் சேலம் கடைவீதியில் பழக்கடை வைத்துள்ளார். அவருக்கும், அருகில் பழக்கடை வைத்துள்ள மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவலர் சிவக்குமார் தன் உறவினரை பக்கத்துக் கடைக்காரர் எடைக்கல்லால் தாக்க முயன்றதாக காவல்துறை மேலிடத்திற்கு தவறான தகவலை கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவலர் சிவக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.