Skip to main content

சேலத்தில் ஒரு நாவல் பழச்சாலை; களைகட்டும் நெடுஞ்சாலைக் கடைகள்

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Salem Highways novel fruits

 

இயற்கை நமக்கு அளித்த அருங்கொடைகளுள் ஒன்று நாவல் பழங்கள் என்றால் மிகை ஆகாது. நாவல் பழங்கள் மட்டுமின்றி அதன் விதை, இலை, மரப்பட்டை என ஒரு மரத்தின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. 

 

சேலம் என்றாலே மாங்கனி மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சீசன் காலங்களில் இங்கே நாவல் பழச்சந்தைகளும் களைகட்டுகின்றன. குறிப்பாக, முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலையோரமாக நாவல் பழ வியாபாரம் சக்கை போடு போடுகின்றன.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பகுதியில் சாலையின் இருபுறத்திலும் சுமார் 140க்கும் மேற்பட்ட நாவல் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் பெண்களே இதுபோன்ற நெடுஞ்சாலையோர கடைகளை நடத்தி வருகின்றனர். 

 

Salem Highways novel fruits

 

நீலா என்பவர் இதே சாலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வருகிறார். சீசனுக்கேற்ற பழங்களை விற்பனை செய்து வருகிறார். அவர் கூறுகையில், ''சித்திரை முதல் ஆடி மாதம் வரை நாவல் பழ சீசன் இருக்கும். நாட்டு ரகம், ஹைபிரீட் ரகம் என இரண்டு ரக நாவல் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஹைபிரீட் ரக பழங்கள் பெரிய சைஸிலும், சதைப் பற்றாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதைத்தான் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். நாட்டு ரகத்தை விட விலையும் சற்று குறைவு. உண்மையில் ஹைபிரீட் ரகத்தை விட நாட்டு ரகம்தான் அதிக சுவையாக இருக்கும்'' என்கிறார் நீலா. 

 

சாலையோர பழ வியாபாரிகள் காலை 7 மணிக்கு கடை விரித்தால் இரவு 7 மணிக்குதான் கடையை மூடுகின்றனர். மதிய உணவுக்காக வீட்டுக்குச் செல்வதில்லை. காலையில் வரும்போதே கையோடு மதிய உணவையும் எடுத்து வந்து விடுகின்றனர். 

 

நாவல் பழத்தின் மகிமைகள் குறித்து நாட்டு மருத்துவர்களிடம் கேட்டபோது, ''நாவல் பழங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறது. நாவல் பழ கொட்டைகளை காய வைத்து பொடித்து, வெந்நீரில் கலக்கிக் குடித்தால் நீரிழிவு பிரச்சனை கட்டுப்படுகிறது. நாவல் பழங்களில் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி வைட்டமின் ஆகிய தாது சத்துகள் இருக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டு வர கல்லீரல் பிரச்சனைகளுக்கும், சிறுநீர்ப்பை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது'' என்கிறார்கள்.

 

நெடுஞ்சாலையோர கடை என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் கார், இருசக்கர வாகனங்களை கடை முன்பு நிறுத்துவதால் விபத்துகளை சந்திக்க நேரிடுகின்றன. அதனால் டோல்கேட் ஒப்பந்ததாரர்கள் சில நேரம், சாலையோரங்களில் கடை போடக்கூடாது என்று கெடுபிடி காட்டுவதாகவும், எடை கற்களை எடுத்துச் சென்று விடுவதாகவும் புலம்புகிறார்கள் சாலையோர வியாபாரிகள். அதுபோன்ற நாள்களில் மீண்டும் காவல்துறை அனுமதி பெற்று கடை நடத்த இரண்டு நாள்கள் ஆகிவிடுகிறது என்றும், 5000 ரூபாய் வரை பொருள்கள் நட்டம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். 

 

Salem Highways novel fruits

 

வெண்ணிலா என்ற பழ வியாபாரி கூறுகையில், ''ஆந்திரா ரக நாவல் பழங்களை மொத்த விலையில் கிலோ 250 ரூபாய்க்கு வாங்குகிறோம். சில்லறை விலையில் கால் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். 10 கிலோ நாவல் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் வாடிக்கையாளர்கள் ருசி பார்ப்பதாகச் சொல்லி எப்படியும் 2 கிலோ பழத்தை சாப்பிட்டு விடுவார்கள். ஒரு கிலோ பழம் டேமேஜ் ஆகிவிடும். இந்த இழப்பை எல்லாம் சரிக்கட்டிதான் விற்பனை விலையை நிர்ணயிக்கிறோம். நாவல் பழங்கள் மட்டுமின்றி பேரீச்சம் பழங்கள், ரம்புட்டான் பழங்களும் விற்பனை செய்கிறோம்'' என்கிறார்.


700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரு நாள் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் சாலையோர பழ வியாபாரிகள். 


நீலா, வெண்ணிலா போன்ற உழைக்கும் பெண்கள், குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைப்பதில் அவர்களின் கணவர்களை விடவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் எனலாம். 


சூப்பர் மார்க்கெட்டுகளில் இதுபோன்ற பழங்களை வாங்கி, பெரு முதலாளிகளின் கல்லாவை நிரப்புவதைக் காட்டிலும், சாலையோர சிறு வியாபாரிகளிடம் வாங்குவதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தினரின் வீடுகளில் அன்றாடம் அடுப்பு எரிவதற்கு நாமும் துணை நிற்க முடியும். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.