Skip to main content

கருணை காட்டிய வீட்டிலேயே கன்னம் வைத்த பலே பெண்கள்! உதவி செய்தாலும் ஆபத்துதான் போல...!!

Published on 16/10/2021 | Edited on 17/10/2021

 

 

salem district womens police investigation

 

பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்களே அதுபோல, உதவி செய்தாலும் தீர விசாரித்துதான் உதவ வேண்டும்; இல்லாவிட்டால், உதவி செய்பவர் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதற்கேற்ப சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாயி. இவருடைய மனைவி மலையம்மாள் (வயது 60).  வியாழக்கிழமை (அக். 14) மதியம், தனது தோட்டத்தில் விளைந்த துளசியைப் பறித்து சேலம் கடைவீதிக்குக் கொண்டு சென்று விற்றுவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார். 

 

அப்போது, சுமார் 35 வயதுள்ள இரண்டு பெண்கள் அவர் அருகே வந்து, ''நாங்கள் சென்னையில் இருந்து வருகிறோம். சேலத்தில் நாங்கள் தேடி வந்த நபரின் முகவரி, செல்போன் நம்பர்களைத் தொலைத்து விட்டோம். உடனடியாக ஊர் திரும்ப முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் இன்று ஒருநாள் இரவு மட்டும் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்து உதவ வேண்டும்,'' என்று பரிதாபமாகக் கேட்டனர். 

 

இதற்கு மலையம்மாள் உடனடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இரண்டு பெண்களும் கண்ணீர் சிந்தியபடி கேட்டதால், கடைசியில் மனம் இரங்கினார். 

 

இதையடுத்து அவர்களை பேருந்தில் அழைத்துச் செல்ல முயன்றார். திடீரென்று அந்த இரு பெண்களும், ''எங்களுடைய சித்தப்பா மகன்கள் இரண்டு பேர், மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அவர்களுடன் மோட்டார் சைக்கிளிலேயே சென்று விடலாம்,'' என்று கூறியுள்ளனர். 

 

இப்போதாவது மலையம்மாள் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன நினைத்தாரோ அவர்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்தப் பெண்கள் கூறியபடி இரண்டு வாலிபர்கள் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் மலையம்மாளையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அவருடைய வீட்டுக்குச் சென்றனர். 

 

இரவு படுக்கைக்குச் செல்லும்போது, மர்ம பெண்களில் ஒருவர் திடீரென்று தான் கழுத்தில் அணிந்திருந்த ஒரு செயினை கழற்றி மலையம்மாளிடம் கொடுத்து, இதை நீங்கள் நகைகள் வைக்கும் பீரோவிலேயே வைத்திருங்கள். காலையில் கிளம்பும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி கொடுத்துள்ளார். அந்த செயினை வாங்கி பீரோவில் வைத்தார் மலையம்மாள். 

 

p

 

அன்று இரவு, வீட்டுக்குள் மலையம்மாளின் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்களும், வீட்டுக்கு வெளியே திண்ணையில் மலையம்மாளுடன் அந்த மர்மப் பெண்கள் இருவரும் படுத்துக் கொண்டனர். 

 

நள்ளிரவு 01.00 மணியளவில் திடீரென்று உறக்கம் கலைந்து எழுந்த அண்ணாமலை, தன் பக்கத்தில் படுத்திருந்த இரண்டு வாலிபர்களையும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளியே மனைவி அருகில் படுத்திருந்த மர்மப் பெண்களும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. 

 

உடனடியாக மனைவியை எழுப்பிய கணவர், பீரோவைத் திறந்துப் பார்த்தார். அப்போது மலையம்மாளின் 8 பவுன் நகைகள் மற்றும் மர்மப் பெண்கள் கழற்றிக் கொடுத்த ஒரு செயின் ஆகியவையும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. அடைக்கலம் கேட்டு வந்த அந்த மர்ம நபர்கள்தான் நகைகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது.

 

தங்களை திட்டமிட்டு ஏமாற்றிய அந்த திருட்டுக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பனமரத்துப்பட்டி காவல்நிலையத்தில் அண்ணாமலை புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

உதவி செய்தாலும் ஆபத்துதான் என்றும், உண்ட வீட்டுக்கே இரண்டகம் ஆன கதை என்றும் உள்ளூரில் காண்போரிடம் எல்லாம் அண்ணாமலை புலம்பி வருகிறார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.