Skip to main content

போலி மருத்துவர் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை! சேலம் தனியார் மருத்துவமனைக்கு அதிரடி தடை!!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

salem district private hospital government order

 

 

சேலத்தில், போலி மருத்துவர் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில், மறு உத்தரவு வரும் வரை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைக்கு அதிரடியாக தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் கொண்டலாம்பட்டி - பெங்களூரு புறவழிச்சாலை அருகே, பிரியம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அரசு அனுமதியின்பேரில், இம்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இம்மருத்துவமனையில், சேலத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (54) என்பவருக்கு கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் உயிரிழந்தால் இறந்தவர் தொடர்பான விவரங்கள், அவருக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்திருந்தால் அதன் விவரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம், ஐசிஎம்ஆர் ஆகிய நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

மோகனசுந்தரத்திற்கு, நவீன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். விசாரணையில், அவர் எம்பிபிஎஸ் படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி நேரில் விசாரணை நடத்தினார். ஆனால், நவீன் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள், சிஆர்ஆர்ஐ எனப்படும் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயம். ஆனால் நவீன் அவ்வாறு பணியாற்றாமலேயே கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

 

நோய்த்தொற்று காலத்தில் முறையாக மருத்துவப் படிப்பை முடிக்காத ஒருவர், சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவத்துறை அறத்திற்கு எதிரானது. இதையடுத்து, பிரியம் மருத்துவமனை இனி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்றும், அதற்காக வழங்கப்பட்டு இருந்த அரசு அனுமதியும் உடனடியாக ரத்து செய்தும் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை திங்களன்று (செப். 21) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக நாம் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பிரியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். அதுகுறித்த விசாரணையின்போதுதான், மருத்துவர் நவீன் என்பவர் போதிய கல்வித்தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவருக்கான பதிவெண்கூட போலியாக இருப்பது தெரிய வந்தது. அவர்தான் இறந்துபோன நோயாளிக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதனால் அந்த மருத்துவமனை, இனி கரோனா நோயாளிகளுக்கு அட்மிஷன் வழங்கவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது. அதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் போலி மருத்துவர் நவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்பந்தமாக கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணியிடம் கேட்டபோது, ''கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நவீன் என்பவர், மருத்துவர் படிப்பை நிறைவு செய்யவில்லை என்று புகார் வந்துள்ளது. அவர், எந்த கல்லூரியில், எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை படித்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

 

நவீன் மீதான புகாரின் பேரிலேயே பிரியம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் கரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலித்ததால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்ற கரோனா நோயாளி ஒருவரிடம் விசாரித்தபோது, நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப சிகிச்சையும், அதற்குரிய கட்டணமும் மாறுபடுகிறது என்றார்.

 

புகாருக்குரிய போலி மருத்துவர் நவீன் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் வீதம் மருத்துவர் கட்டணமாக பெற்றுள்ளார். நாளொன்றுக்கு உணவுக்கட்டணம் 300 ரூபாய், உடல் முழுவதும் மூடியிருக்கும் 'பிபிஇ கிட்' உடை ஒரு செட்டுக்கு 350 ரூபாய் வீதம் 30 செட்டுக்கு 10,500 ரூபாய், ஆய்வகத்திற்கு 13,277 ரூபாய், மருந்தக கட்டணமாக 85 ஆயிரம் ரூபாய், இன்னொரு மருத்துவருக்கான கட்டணமாக நாளொன்றுக்கு தலா 2500 ரூபாய் என 7 நாள்கள் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியிடம் 1.80 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, அங்கு சிகிச்சை பெற்ற மற்றொரு நோயாளி கூறினார்.

 

எனினும், இம்மருத்துவமனையைக் காட்டிலும் சேலத்தில் 10 நாள் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

கரோனா நோயாளிக்கு போலி மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதனால் தனியார் மருத்துவமனைக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டதும் சேலத்தில் மருத்துவத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.