Skip to main content

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த சேலத்தின் பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் கொலை

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

சேலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். 

 

kathir


சேலம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்திலும் அடைத்து வருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சேலம் மாவட்ட காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் பிரபல  ரவுடியை சுட்டுக்கொன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர் என்கிற கதிர்வேல் (28). இவர் மீது 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி வழக்குகள் காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பராமரிக்கப்படும் போக்கிரித்தாள் (ஹிஸ்டரி ஷீட்) ஆவணமும் கதிர்வேல் மீது பராமரிக்கப்பட்டு வருகிறது. 

 

kathir


பிரபல ரவுடியும், திமுக பிரமுகருமான காட்டூர் ஆனந்த் என்பவருடன் அல்லக்கையாக கதிர்வேல் சுற்றி வந்தார். எப்போதாவதுதான் வீட்டுக்கு வந்து செல்வார் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.


கடந்த ஏப்ரல் 5ம் தேதி, வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (31) என்பவர் மர்மமான முறையில் இறந்தார். விசாரணையில், அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும், வாகன விபத்தில் அடிபட்டு கணேசன் இறந்ததுபோல் சாலையில் சடலத்தை கிடத்தி நாடகமாடி இருப்பதும் தெரிய வந்தது. 


இந்த வழக்கில் கதிர்வேல், காட்டூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் முருகன், கோபி, பிரபு ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் மே 1ம் தேதி, கதிர்வேலை வீராணம் காவல்துறையினர் கைது செய்தனர். காரிப்பட்டி காவல்துறையினர் அவரை தேடி வந்ததால், கதிர்வேலை அவர்களிடம் வீராணம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


''பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் கணேசனும் எங்களுடன் வந்தார். அதில் கிடைத்த பணம், நகைகளை பங்கு போடுவதில் கணேசனுக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அவரை நாங்கள் திட்டமிட்டு கொலை செய்து, சடலத்தை சாலை நடுவில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டோம்'' என்று கதிர்வேல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கதிர்வேலை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டியில் உள்ள ஒரு ஆலமரத்தின் பொந்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார்.


அதைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்துக்கொண்டு காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி, எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் குள்ளம்பட்டிக்குச் சென்றனர். அங்கே ஆலமரத்தின் பொந்தில் இருந்து கத்தியை எடுத்த கதிர்வேல், திடீரென்று காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றார். கத்தியை கீழே போடுமாறு எச்சரித்தும் அவர் ஆய்வாளர் சுப்ரமணி, மற்றும் உதவி ஆய்வாளர் மாரியை தாக்கினார். இதில் சுப்ரமணிக்கு மார்பு, கை ஆகிய இடங்களிலும், மாரியின் இடது கையிலும் கத்தி வெட்டு விழுந்தது.

 

kathir


இதையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் சுப்ரமணி, தன்னிடம் இருந்த 9 எம்.எம். ரக பிஸ்டலால் கதிர்வேலை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில் அவருடைய மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 


கதிர்வேலின் சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவை, வீடியோ கேமராவிலும் பதிவு செய்யப்பட்டது. என்கவுண்டர் நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி. தீபா கனிக்கர் நேரில் பார்வையிட்டார். காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 


இது ஒருபுறம் இருக்க, என்கவுண்டர் பின்னணியில் வேறு ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. 


ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இளவரசி (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் காதலருடன் கடந்த மார்ச் 22ம் தேதி நள்ளிரவு சேலத்தில் இருந்து  பெங்களூக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தின் அடியில் முள்புதர் ஓரமாக அந்த ஜோடி  ஒதுங்கியுள்ளது. 


அப்போது திடீரென்று அவர்களை நெருங்கிய 6 பேர் கும்பல், இளவரசியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்ததுடன், காதலன் கண் முன்னாலேயே தவறாகவும்  நடத்த முயற்சித்துள்ளது. ஆனால், இளவரசி தன்னிடம் உள்ள நான்கரை பவுன் சங்கிலியை கொடுத்ததால் அவர்களை அந்த கும்பல் விட்டுவிட்டது. இதுகுறித்து விசரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கும்பல் ஏற்கனவே சில பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது  தெரிய வந்தது.


பொள்ளாச்சியில் நடந்ததுபோல் சேலத்திலும் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற யூகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளும் செய்திகள்  வெளியிட்டன. அதற்கு இன்று வரை காவல்துறை மறுப்பு கூறவில்லை. இந்நிலையில் முறுக்கு வியாபாரி கணேசனுக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இருப்பதும்,  அவர் நடந்த விவரங்களை அப்ரூவராக மாறி, காவல்துறையிடம் பகிரங்கமாக தன் கூட்டாளிகள் அனைவரை பற்றியும் கூறினார். அதைத்தொடர்ந்துதான் கொண்டலம்பட்டி பெரிய புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், சுபாஷ், இளங்கோ, தினேஷ், தைலானூரைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கதிர்வேல் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.


காவல்துறையில் தங்களைப் பற்றி போட்டுக்கொடுத்ததால்தான், கணேசனை திட்டமிட்டு கதிர்வேல், காட்டூர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகள் போட்டுத்தள்ளியதாகவும்  சொல்லப்படுகிறது. 


பட்டர்பிளை மேம்பாலம் சம்பவத்தின் முழு பின்னணியை ஒப்புதல் வாக்கமூலமாக அளித்த கணேசன் கொல்லப்பட்டுவிட்டார். அவரை கொன்ற முக்கிய கொலையளியை காவல்துறையினர் திட்டமிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொன்றுவிட்டனர். இதன்மூலம் பாலியல் பலாத்கார வழக்கை ஊற்றி மூடப்பார்க்கிறது காவல்துறை என்ற யூகங்களும் வலுவாக கிளம்பியுள்ளன. 


அதேநேரம், காவல்துறையில் சரண் அடைய வந்த கதிர்வேலை திட்டமிட்டே சுட்டுக்கொன்றுவிட்டு நாடகமாடுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.