Skip to main content

போலி நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 Salem Attur Court dismisses government school teachers anticipatory bail pla

 

மனைவிக்கு ஜீவனாம்ச தொகையைத் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற போலி உத்தரவு நகல்களை சமர்ப்பித்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.    

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45) அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய முதல் மனைவி கலா. கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கலாவுக்கு ஆசிரியர் சரவணனின் ஊதியத்தில் இருந்து மாதம்தோறும் ஜீவனாம்சத்திற்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சரவணன், ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தின் பேரில்  ஒரு உத்தரவு நகலை, அவர் முன்பு பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி  மாவட்டம் சிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலில், சரவணனின் முதல் மனைவி கலாவுக்கு தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஜீவனாம்ச தொகையை அவர் கோரவில்லை. எனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 

அதேபோல, தற்போது பணியாற்றி வரும் எலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அதே நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற ஒரு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். அந்த உத்தரவில், முதல் மனைவி கலாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜீவனாம்சமாக மாதம் 9000  ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஜீவனாம்ச தொகை வேண்டாம் என்று கலா சொல்லிவிட்டார்.  எனவே, 2022 ஆம் ஆண்டு முதல் சரவணனுடைய சம்பளத்தில் ஜீவனாம்ச தொகை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த இரு உத்தரவு நகல்களின் மீதும் இரண்டு தலைமை ஆசிரியர்களுமே சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உத்தரவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவற்றை ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்து விவரம் கோரினர். இந்த உத்தரவு நகல்களை ஆய்வு செய்த நீதிமன்ற எழுத்தர் செல்வி, இப்படி ஒரு உத்தரவை ஆத்தூர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், இவை இரண்டுமே போலியானவை என்றும் கூறினார்.

 

மேலும் செல்வி, இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை ஆட்சேபனை தெரிவித்தார். ஆசிரியரே மோசடியாக  நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்றார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி சுமதி, ஆசிரியர் சரவணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய ஆத்தூர் நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்