Skip to main content

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Rural development department officers struggle

 

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதன்படி கடந்த 19ஆம் தேதி அவரவர் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அடுத்து 23 மற்றும் 24ஆம் தேதிகளில் அலுவலகத்திற்கு வராமல் ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டம் செய்தனர். 

 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த 45 வயது முத்தான் என்பவர் 24ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். முத்தான் பணி சுமை காரணமாகவே  இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், முழுவதும் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 26ஆம் தேதி ஒரு நாள் பணியை புறக்கணித்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சிச் செயலர் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் இறந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினார்கள். 

 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 வட்டாரங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவர்கள் சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை  புறக்கணித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.