Skip to main content

“ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும்...” - ஆர்.எஸ். பாரதி

Published on 23/08/2023 | Edited on 23/08/2023


 

R.s.Bharathi condemned tamilnadu governor for not accepting TNPSC Chairman

டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி நியமனம் தொடர்பாகத் தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆளுநர் ஆர்.என். ரவி சில கேள்விகளை முன்வைத்துக் கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு சார்பாக டி.என்.பி.எஸ்.சியின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமித்து அதன் கோப்புகளைத் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பது தான் முறையாகும். ஆனால், அவர் திட்டமிட்டு மறுப்பதற்கான உள்நோக்கம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். அரசு உயர் பதவிகளில் சமூக நீதி பின்பற்ற வேண்டும். கலைஞர் இருந்த ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்ட அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பதவிகள் வழங்க வேண்டும் என்று எண்ணி அதைச் செய்தார். அந்த வழியில் தான் டி.என்.பி.எஸ்.சி தலைவராக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லையோ அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்வு செய்து  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

 

முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர் பணியாற்றி வந்த காலத்தில் எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் தன்னுடைய பணியில் சிறப்பாக செய்தார். அதை வைத்து தான் அவரை டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவராகத் தமிழக அரசு பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது பெயரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் கடந்த காலங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் அந்த முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையில் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரைத் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. ஆனால், அதை மறுத்து ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.

 

சென்னை தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம். ஆனால், ஆளுநர் மெட்ராஸ் டே என்று பதிவு போடுகிறார். இதன் மூலம் தமிழக மக்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார் என்று தெரிகிறது.  அவருடைய செயலைத் தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதற்குரிய விலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தர வேண்டியிருக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவினரையே டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அனுபவம் மிக்கவரான சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தோம். எங்கள் கட்சியிலும் பல அனுபவசாலிகள், வழக்கறிஞர்கள் இருந்தபோதும் கூட அவர்களை இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும். தற்போது தி.மு.க மென்மையாக இருக்கிறது. எங்கள் தலைவர் அனுமதித்தால் பழைய தி.மு.க.வாக மாறுவோம். அப்படி மாறக்கூடியவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முதல்வர் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலைமை வரும். அ.தி.மு.க.வை நாங்கள் அழிக்கமாட்டோம். அவர்கள் எங்கள் பங்காளி. நாங்கள் எல்லாம் ஒரே பிராண்ட் தான். அவர்கள் வரும் காலங்களில் எங்களுடன் வந்து இணைவார்கள்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.