Skip to main content

பிச்சைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம்..! காவல்துறை மீட்டது எப்படி..?

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரை ஒட்டியுள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதானவர் சண்முகையா. உறவுகள் இருந்தும் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டவர். இவரது முதல் மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவது மனைவியோ உடல்நலம் சரியில்லாத நிலையில் இவரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து புறக்கணிக்கப்பட்ட சண்முகையா, அருகிலுள்ள சங்கரன்கோவில் நகரின் வீதிகளில் பிச்சை எடுத்து தனது ஜீவனத்தை நடத்திவந்திருக்கிறார். 

 

ஒரு கால் உடைந்த நிலையில் அவரால் சரியாக உட்காரவும் முடியாத நிலை. இதனால், சாப்பிடுவது, டீ குடிப்பது உள்ளிட்டவற்றை நின்றுகொண்டே செய்ய வேண்டிய கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அன்றாடம் பஜார் வீதிகள், கோவில் பகுதிகளில் பிச்சை எடுக்கும் சண்முகையா, தனக்கான உணவுச் செலவுபோக மீதமுள்ளவற்றைத் தன்னுடைய மூட்டையில் பாதுகாப்பாக வைத்திருப்பார். 

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?
                                                       சண்முகையா

 

எங்கு சென்றாலும் அந்த மூட்டையை எடுத்துக்கொண்டே செல்வார். அதைவிட்டுப் பிரியமாட்டார். டீ குடிக்கும்போதும், உணவு சாப்பிடும்போதும் கூட அவர் தன் தலையில் உள்ள மூட்டையை கீழே இறக்கி வைத்தது கிடையாது. இதில் மிகவும் கவனமாகவும் செயல்பட்டுவந்திருக்கிறார். கசங்கிப் போன கந்தலான ஆடை, பரட்டைத் தலை என மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கும் இந்த ஜீவனைக் கண்டு இரக்கப்பட்ட பலர், இயன்றளவு பிச்சை போட்டுள்ளனர். பேருந்து நிலையம், கோவிலின் மாட வீதிகளில் இரவு பொழுதைக் கழிக்கும் சண்முகையா, அதுசமயம் கூட தன்னுடைய மூட்டையைக் கவனமாக வைத்திருப்பதுண்டாம்.

 

இப்படி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தினசரி வீதிகளில் பிச்சை எடுத்துப் பிழைப்பை ஓட்டும் சண்முகையா, தனக்கான அன்றாடச் செலவு போக மீதமுள்ளவற்றறைப் பத்திரமாக தனது மூட்டைக்குள் வைத்துப் பாதுகாத்துவந்திருக்கிறார். பிச்சை சரிவரக் கிடைக்காத நிலையில் அன்றைய தினம் தனக்கான உணவுச் செலவுகளுக்கு இந்த சேமிப்பு உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு சிறுகச் சிறுக சேமித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று பஜார் வீதியிலிருக்கும் டீ கடை ஒன்றில் டீ குடிப்பதற்காகப் போயிருக்கிறார். அப்போது அந்தக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தன் தலையில் இருந்த மூட்டையைச் சண்முகையா ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு டீ வாங்கிக் குடித்திருக்கிறார். திரும்பி வந்து பார்க்கும்போது தனது அழுக்கேறிப் போன மூட்டை திருடு போனது தெரியவர, பதறிப்போனவர் அருகிலுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிலிருந்த போலீசாரிடம் படபடப்பாக நடந்ததைத் தெரிவித்திருக்கிறார்.

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?
                                                   கொள்ளையர்கள் 

 


“ஐயா, இத்தனை வருட காலம் நான் பிச்சை எடுத்து செலவு பண்ணுனது போக 2 லட்சத்துக்கும் மேல மூட்டையில சேமிச்சு வச்சிருந்தேம்யா. அது திருடு போயிருச்சுய்யா” என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறியிருக்கிறார் சண்முகையா. இந்தத் தகவலறிந்த சங்கரன்கோவில் டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார், விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தபோது, லுங்கி கட்டிய ஒருவர் சண்முகையாவின் மூட்டையைத் திருடிக்கொண்டு போவது தெரியவந்திருக்கிறது. 

 

அவரை அடையாளம் கண்ட போலீசார், அவரைக் கஸ்டடிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவரிடம் முறையாக விசாரணையை மேற்கொண்டபோதுதான், அவர் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. அடுத்த அவரது கூட்டாளியான ஸ்ரீனிவாசன், உலகநாதன், ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தை மீட்டிருக்கிறார்கள். மேலும் விசாரணையில், சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காக இந்தப் பணத்தைத் திருடியதாக அந்த நான்கு பேரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 

 

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசியபோது, “இது ரொம்பவும் பரிதாபமான சம்பவம். பாவப்பட்ட பிச்சைக்காரரிடமே திருடியது ரொம்பக் கொடுமை. இதில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளை ஒரே நாளில் பிடித்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான், அன்றைய தினம் இரவு விடிய விடிய பல இடங்களுக்கு அலைந்து, ஐந்து குற்றவாளிகளையும் தூக்கியுள்ளோம். அவர்களிடமிருந்த மிச்சமுள்ள 49,320 ரூபாயை ரெக்கவரி செய்யப்பட்டிருக்கு. பாவம் அந்தப் பிச்சைக்காரரின் கால் உடைந்துபோனதால் அவரால் நின்றுகொண்டுதான் சாப்பிட முடிகிறது. 

 

பிடிபட்டவர்களில் ராஜபாளையம் முருகன் என்பவன், தண்ணி அடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கிடப்பவன். அப்போதுதான் அவனுக்கு சண்முகையாவிடம் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போதே அதை அடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டிருக்கிறான். அதனால்தான் அன்றைய தினம் திட்டமிட்டு சண்முகையாவை முருகன், டீ குடிப்பதற்கு கூட்டிச் சென்றபோது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவனது கூட்டாளிகள், மூட்டையைத் திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள். இதில் முருகன் என்பவன் 20,000 ரூபாய்க்கு அடமானத்திலிருந்த தனது வீட்டு நகையை, திருடிய பணம் மூலமாகத் திருப்பியிருக்கிறான். ஒருத்தன் 5000, இன்னொருத்தன் 2,500 பங்கு வாங்கிட்டுத் தேனிக்கு ஓடிட்டான். திருடிவிட்டு வேறு எங்கும் போகாமல் இங்கேயே இருந்திருக்கிறார்கள். ஜாலியாக செலவு செய்துவிட்டு, குமாரும் இன்னொருத்தனும் விடிய விடிய 3,000 ரூபாய்க்கு மேல குடிச்சிருக்காங்க. இதுல ஒருத்தன் பூக்கடையில் உள்ள சில்லரைப் பணத்தையும் திருடிச் செலவழிச்சவன். இவங்க ஐந்து பேரையும் உள்ள தள்ளியிருக்கிறோம். பாவம் 10 வருசத்துக்கு மேல பிச்சை எடுத்து சேமித்த சண்முகையா, தன்னுடைய சிறிய வீடு ஒன்றின் பராமரிப்புச் செலவுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்திருக்கிறார். ஒருவனுடைய மனமும் உடலும் இயங்காதபோதுதான் அவன் பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறான். அந்தப் பரிதாபப் பிச்சைக்காரனிடமே திருடுவது கொடுமையிலும் கொடுமை. பஞ்சமா பாதகம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.