Skip to main content

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.