
பருவம் தப்பிய தொடர் மழையால் தமிழகம் முழுவதும் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முழு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் விவசாயிகள். ஆனால் பாதிப்பில் 33 சதவீதம் மட்டுமே நிவாரணம் வழங்கக் கணக்கெடுப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், "தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விளைபயிர்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்" என்பதை வலியுறுத்தி ஆலங்குடித் தொகுதி மெய்யநாதன் எம்.எல்.ஏ தலைமையில், ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன், தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு நிவாரணம் வழங்கவேண்டும். 33 சதவீதம் நிவாரணம் வழங்க கணக்கெடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும், இந்த மாத இறுதிக்குள் முழு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் ஆலங்குடி தொகுதி முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.