Skip to main content

 தடுப்பணையில் மூழ்கி 7 பேர்  உயிரிழந்ததால் சோகம்!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

river childrens and womens incident police investigation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஏ.குச்சிப்பாளையத்தை ஒட்டி கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தண்ணீரை தடுத்து வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.

 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதம் (வயது 20), அவரது மருமகளும் குணாள் மனைவியுமான பிரியா (வயது 19) ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர். உடன், அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினிவயது (வயது 13), காவியா (வயது 11) ஆகியோரும் குளிக்க சென்றுள்ளனர். இதில், தடுப்பணை சேற்றில் சிக்கியவரை மாற்றி மாற்றி காப்பாற்ற முயன்று சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (வயது 16), சங்கர் மகள் சங்கவி (வயது 15) ஆகியோரும் காப்பாற்றச் சென்று அவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். 

 

தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்தனர். தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுததால் அப்பகுதியே சோகமாக மாறியது. மேலும் ஒரே கிராமத்தில் 5 பேர் இறந்ததாலும் இறந்த அனைவரும் உறவினர்கள் என்பதாலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

 

இதில், இறந்த பிரியா ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது.கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 பேர்களின் உடலை தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகனேஷ் ஆகியோர் பார்வையிட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இதுபோன்று ஆறு, குளம், குட்டை, அணைக்கட்டு, தடுப்பணை பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறை எச்சரித்தும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. இது சம்பந்தமாக தமிழக முதல்வர் அறிவுறுத்தல் பேரில்  தானும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்கள்  குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். தமிழக அரசு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது" என  தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.