Skip to main content

வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Revenue Officers Association struggle on demanding various things

 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மாநில அளவிலான 'கோரிக்கை மாநாடு' சேலம் மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், சட்டமன்றத் தேர்தல் நடத்தும் பணி, பேரிடர் மேலாண்மைப் பணி உள்பட பல்வேறு முக்கியப் பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், அவர்களின் 10 அம்ச கோரிக்கைகளான “அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், வருவாய்த் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி  ஆணை வெளியிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 10 லட்சமாக உயர்த்திட வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதனால், இன்று முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த்துறையினர் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தினை தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள் இன்றி அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைப்போல பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேலை நிறுத்தம்; வருவாய்த்துறை அலுவலகத்தில் தேங்கிய பணிகள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Office work has also been completely disrupted due to struggle by revenue dept officials.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் மொத்தம் 14 ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  முதல்கட்டமாக கடந்த பிப்.13ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டாம் கட்ட போராட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஊழியர்கள் நேற்று(26.2.2024) வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று (27.2.2024) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மொத்தம் 400 ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் வாயிலாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை நிர்யணம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக தெளிவுரை வழங்கிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இன்று முதல் தொடங்கிய காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, விதவை உள்ளிட்ட அனைத்து வகையான சான்றுகள் வழங்கும் பணிகளும், தேர்தல் மற்றும் அலுவலகப் பணிகளும் முற்றிலும் தடைபட்டுள்ளது.

Next Story

தொடரும் கைது; அடுத்தடுத்து சிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Sethpattu taluk revenue officer arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் தாலுகா செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் வரதராஜ். இவர் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் முறை உறவினரும், எதிர் வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சார்ந்த சௌபாக்கியம் என்பவரிடம் இடம் வாங்கி கிரயம் செய்துள்ளார். அந்த இடம் உட்பிரிவுகள் செய்யாமல் கூட்டு பட்டாவாக வைக்கப்பட்டுள்ளது. தான் இடம் வாங்கி உள்ளதாகவும் அதனால் பட்டாவை உட்பிரிவு செய்து தனது பெயருக்கு மாற்றி தருமாறு 2023ல் மனு செய்துள்ளார். முறையான காரணமில்லாமல் இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதுப்பற்றி தன் தம்பி சகாதேவனிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி சேத்பட் தாலுகா அலுவலகம் வந்து சர்வேயர் தீனதயாளன் அவர்களைச் சந்தித்தார். அப்போது, நீங்கள் இடம் கிரயம் பெற்றால் மட்டும் போதுமா?  நீங்கள் ஏன் என்னை வந்து சந்திக்கவில்லை என்று கேட்டவர், அந்த இடம் மூன்று பட்டாவுக்கு பெயர் மாற்ற ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் மூன்று பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இவர்கள் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் ரூபாய் 10,000 தர வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு அவர்கள் ரூபாய் 5000 வேண்டும் என்றால் முன்பணம் தருகிறோம், பின்பு பட்டா பெயர் மாற்றம் செய்த பிறகு தருகிறோம் என்று வந்து விட்டார்கள்.

இது சம்பந்தமாக ஹரி கிருஷ்ணனுடைய தம்பி சகாதேவன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை விஜிலென்ஸ் அலுவலகம் வந்து டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகாரை கொடுக்க, அவரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணி அளவில் தாலுக்கா அலுவலகத்தில் வைத்து, சகாதேவன் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்து பணத்தை பெற்றுக் கொண்டார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தோடு அவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் இதேபோல் போளூரில் வருவாய்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ட்ராப் செய்து ஒரு அலுவலரை லஞ்சப்பணத்தோடு கைது செய்தனர். இந்த மாதம் சேத்துப்பட்டில் சர்வே அலுவலகத்தில் ட்ராப் செய்து சர்வேயரை கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கி வருவாய்த்துறையினர் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் இவர்கள் மாறாமல் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்த லஞ்ச கைதுகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.