Skip to main content

"படித்த பள்ளியிலேயே  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வது பெருமையாக உள்ளது" - ஓய்வு பெற்ற நீதிபதி நெகிழ்ச்சி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

retired justice pugazhenthi says honor to attend the school where I studied as a special invitee

 

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்புடன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விருத்தாசலம் நகராட்சியால் கட்டப்பட்ட புதிய நூற்றாண்டு விழா கலையரங்கம் மற்றும் நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (ஓய்வு) கி.தனவேல், பாடலாசிரியர் அறிவுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வழக்கறிஞர் கோ.பாலச்சந்திரன் வரவேற்றார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பள்ளியின் முன்னாள் மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதியுமான புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.

 

விழாவில் பேசிய நீதிபதி புகழேந்தி, "40 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த பள்ளிக்கு வந்துள்ளேன். ஒவ்வொருவரது வாழ்வின் உயர்விற்கும் பள்ளிப் படிப்பு பயின்ற பள்ளிக்கூடம் மிகவும் முக்கியமானது. நமது வாழ்க்கை உயரக் காரணம் பள்ளிக்கூடமும் ஆசிரியர்களும் தான். நான் சட்டத்துறையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்த பள்ளிக்கூடமே. நான் என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அவ்வாறு இயங்கியபோது இந்த பள்ளியில் நடந்த ஒரு பட்டிமன்றமே நான் சட்டத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமானது. நான் அதற்கு பிறகு சட்டம் படித்து வழக்கறிஞராகி, அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்து, இன்று நீதிபதியாக உங்கள் முன்பு வந்துள்ளேன்.

 

நமது வாழ்க்கையின் படிக்கட்டுகளாக இந்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. இந்த உயரத்திற்கு வந்த பிறகு நாம் இந்த பள்ளிக்கூடத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் எனக்குள் எழுந்திருக்கிறது. அதேபோல உங்கள் ஒவ்வொருவருக்கும் எழுந்திருக்கிறது. அது இன்று சாத்தியமாகியுள்ளது. இது சாத்தியமானதற்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தான் காரணம். முன்னதாக இந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் தான் கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் கலெக்டர் பாலசுப்பிரமணியன், ‘கலையரங்கமாக கட்டுங்கள். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' எனக் கூறியதும் அனைவருமே அதற்கு ஒப்புக்கொண்டனர்.

 

முன்னாள் மாணவர்கள் தங்களது நேரத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டு இந்த கலையரங்கத்தையும் நுழைவு வாயிலையும் சிறப்பாக கட்டியுள்ளனர். இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும். இதற்கு  அரசின் நமக்கு நாமே திட்டமும் ஒரு காரணம். நமது பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு தான். ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்ட இந்த கலையரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் பார்த்தபோது நாமும் இந்த பள்ளிக்கூடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். படத்தில் தங்கர்பச்சான் மிகவும் ஏழ்மையாக இருந்து முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியை மீட்டெடுப்பார். அதுபோல இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரியல் ஹீரோக்களாக மாறி இந்த பள்ளியை கட்டமைத்து வருகின்றனர். அந்த நிஜ ஹீரோக்களுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

 

retired justice pugazhenthi says honor to attend the school where I studied as a special invitee

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகமும் நன்றாக கட்டமைந்தால் பெற்றோர்களும் மாணவர்களுமே அந்தப் பள்ளியை பார்த்துக் கொள்வார்கள். இந்த பள்ளியை போன்று முன்மாதிரியாக கொண்டு மற்ற பள்ளிகளையும் சிறப்பாக கட்டமைக்க இந்த மாவட்டத்திலிருந்து கலெக்டர் முன்னெடுத்து செயல்படுத்தினால் மற்ற மாவட்டங்களுக்கும் இது பரவும். இதனால் நமது தமிழகம் மிகப் பெரிய நலனை பெரும். மாணவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். நமது மாநிலம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக திகழும். இந்த மாவட்டத்தின் கலெக்டர் அற்புதமான மனிதர். நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். என்னுடைய பல வழக்குகளின் வெற்றிக்கு கலெக்டர் அவர்களின் உழைப்பும் நேர்மையுமே காரணம். நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறோம். அவர் இந்த மாவட்டத்திற்கு வந்து மூன்று வாரங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஆறாவது இடத்திற்கு நமது வருவாய் மாவட்டத்தை கொண்டு வந்துள்ளார். விரைவில் முதல் இடத்திற்கும் கொண்டு வருவார். அவருக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

 

retired justice pugazhenthi says honor to attend the school where I studied as a special invitee

இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. மாணவர்களிடம் நல்லொழுக்கம் இல்லை. மாணவர்களிடம் தவறான பழக்கம் பரவுகிறது என அறிந்தேன். நாங்கள் படித்தபோது இந்த பள்ளிக்கூடத்தில் என்.சி.சி போன்ற அமைப்புகள் இருந்தன. இதனால் நாங்கள் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொண்டோம். தற்போது அந்த அமைப்புகள் இந்த பள்ளியில் செயல்படவில்லை என அறிந்தேன். அதனால் கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அரசு பள்ளி மாணவர்களை நல்ல முன்னெடுப்புக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதற்கு பங்களிப்பு தர வேண்டும். உழைப்பும் முயற்சியும் ஒழுக்கமும் நம்மை முன்னேற்றும். இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

 

retired justice pugazhenthi says honor to attend the school where I studied as a special invitee

தனியார் கல்வி நிறுவனங்களில் தான் எங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பார்கள். இதுதான் அரசு பள்ளியில் எனது முதல் நிகழ்ச்சி. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளத்தை அரசு பள்ளி ஆசிரியர்கள் பெறுகிறார்கள். ஆனால் அர்ப்பணிப்பு அரசு ஆசிரியர்களிடம் குறைவாக உள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும்.  அவ்வாறு நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தால் என்னை போன்ற நீதிபதியாகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவோ மாணவர்கள் வருவார்கள். தமிழகத்திற்கே நாம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

 

retired justice pugazhenthi says honor to attend the school where I studied as a special invitee

நான் படித்த பள்ளியிலேயே நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பைக் கொடுத்தவர்களுக்கு நன்றி. இதனை இதோடு நிறுத்தி விடாமல் இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டி முடிக்கும் வரை முன்னாள் மாணவர்களின் பணிகள் தொடர வேண்டும். மற்றவர்களையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நாம் முன் உதாரணமாக இருந்து, முன்னாள் மாணவர் சங்கமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து அரசாங்கத்தை நாம் எதிர்பார்க்காமல் நாமே இந்த அரசு பள்ளிகளை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். ஏழை மாணவர்களும் நல்ல நிலையை அடையலாம். அவர்கள் நல்ல நிலையை அடைந்தால் நமது நாடும் நல்ல நிலையை அடையும்" என்றார்.

 

தொடர்ந்து முன்னாள் மாணவர்களை மேடைக்கு அழைத்து அவர் பாராட்டினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த், நகர் மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி, மாவட்ட கல்வி அலுவலர் துரை பாண்டியன்,  நகராட்சி ஆணையாளர் சேகர், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.