![A retired headmaster who moved out with his wife; Action by the mysterious](http://image.nakkheeran.in/cdn/farfuture/jtUu19mb7HNhp4DAznMWocMdnGYRD_hRyQY0KhpXBuI/1684065312/sites/default/files/inline-images/1k3_16.jpg)
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ஜான்சிராணி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். 61 வயதான இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஆரோக்கியதாஸ் நேற்று காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டுத் தனது மனைவி ஜெசிந்தாமேரியுடன் வெளியே சென்றுள்ளார்.
வெளியே சென்றுவிட்டு மீண்டும் மதியம் 12 மணியளவில் வீட்டிற்குத் திரும்பி வந்து, வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 11 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் பெரியார் நகர் பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 11 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.