![Resolution in Gram Sabha meetings against NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/1HNl7c5QaTubSICaplqky5_T4gr5VmRl21R8iP11C4Q/1679507997/sites/default/files/2023-03/n2239138.jpg)
![Resolution in Gram Sabha meetings against NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/kygyCP0e3ImLipLvELvR30KxHW1CDg0hAU45a9grcjw/1679507997/sites/default/files/2023-03/n2239139.jpg)
![Resolution in Gram Sabha meetings against NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/E25tzuECjtLmpWggjhA4MAmGVw49yBygBSRCQ5af3h0/1679507997/sites/default/files/2023-03/n2239140.jpg)
![Resolution in Gram Sabha meetings against NLC](http://image.nakkheeran.in/cdn/farfuture/A2BIlvG9df6RmJJxlR8a9wYG6L02rRbFdDDGy2TEDOk/1679507997/sites/default/files/2023-03/n2239141.jpg)
மார்ச்.22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கிராம சபைக் கூட்டங்களில் நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கங்கள் விரிவுபடுத்துவதை நிறுத்தக் கோரியும், புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ம.கவின் பசுமைத் தாயகம் சார்பாக கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கடலூர் மாவட்டம் நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட ஆதண்டார்கொல்லை, வடக்குவெள்ளூர், கத்தாழை, தொப்பிலளிகுப்பம், அம்மேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது சுரங்க விரிவாக்கம் மூன்றாவது புதிய நிலக்கரி சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம், சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி நிலக்கரி திட்டம், உள்ளிட்ட நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய நிலக்கரி சுரங்க திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும் அவற்றுக்காக நிலம் கையகப்படுத்துதல் துரப்பன ஆய்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் முன்மொழிய அதன்படி நிறைவேற்றப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் சுரங்க விரிவாக்கம் அல்லது புதிய நிலக்கரி சுரங்கம் எதுவும் அமைக்கப்படாத மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை பிரகடனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கத்தை கிராம சபைக் கூட்டங்களின் மூலமாக வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய சுரங்கம் அல்லது சுரங்க விரிவாக்கம் அல்லது துரப்பன ஆய்வு என எதையும் தங்களது கிராமத்தில் இனி ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கையொப்பமிட்டு தீர்மானத்தை நிறைவேற்றினர்.