தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபுறம் கடந்த சில நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், சாரல் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டதால் குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததது. இந்தநிலையில் தற்பொழுது நீர் வரத்து சீரடைந்ததால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.
நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர். ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.
கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல் பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.
அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.