Skip to main content

''தமிழனாக உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம்''- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

 "This is the reason for feeling emotional as a Tamilian" - M.K.Stalin's resilient speech!

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் மிக முக்கிய இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சி கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் விதமாக மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற வந்த முதல்வருக்கு காவலர்களின் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

 

 "This is the reason for feeling emotional as a Tamilian" - M.K.Stalin's resilient speech!

 

அதன் பிறகு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய போது தமிழகத்தின் முதலமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் தமிழன் என்கின்ற அடிப்படையில் உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்த இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான். 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ஒரு நெல்மணியை கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது என்று 1755 ஆம் ஆண்டு சொன்னவர் நெற்கட்டான் செவல் பூலித்தேவர். சிவகங்கைக்கு அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த மண்டியிடாத மானப்போர் புரிந்த மாவீரன் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. 'தானம் கேள் தருகிறேன் வரி என்று கேட்டால் தரமாட்டேன்' என்று சொன்ன மாவீரன் தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799. தூக்கு மேடைக்கு செல்லும்போது கூட தன்னை காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்தபடியே சென்றதாக அன்றைய கவர்னர் எட்வர்ட் கிளைவுக்கு தளபதி பானர்மேன் எழுதிய கடிதம் கூறுகிறது. கட்டபொம்மனின் மொத்த படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவரது மாமன் மகள் வடிவு. தற்கொலை படை தாக்குதலை நடத்தியவர். காளையார் கோவில் தாக்குதலில் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதும் சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி தன்னைப் போன்ற விடுதலை தாகம் கொண்ட அனைவரையும் அணி சேர்த்து விடுதலைப் படை அணிகட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார்.

 

 "This is the reason for feeling emotional as a Tamilian" - M.K.Stalin's resilient speech!

 

பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்கு பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார். தனது உடையில் நெருப்பை வைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவர் குயிலி. சின்ன மருதுவும் பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஸ் இது 1801 ஆம் ஆண்டு. சென்னிமலைக்கும் சிவமலைக்கும் இடையிலே ஒரு சின்னமலை என்று சொல்லி மறைந்து இன்றும் வரலாற்றில் பெரும் மாலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அவரது போர்படையிலும், ஒற்றர் படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு பயம் என்றால் என்னவென்று காட்டப்பட்டது.

 

நான் சொன்னது அனைத்தும் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை. 1857 சிப்பாய் புரட்சியை தான் முதலாவது இந்திய விடுதலை போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவை தான் இவை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று கொடியை ஏற்றும்போது தமிழனாக பெருமைப்படும், உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.

 

அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ அன்றைய நாளில் விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் நமது தமிழ்மண். 200 ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல் என்று சொன்ன திப்புசுல்தானின் தீரம் கொண்ட படை வீரர்களை கொண்டிருந்த மண் நம்முடைய தமிழ் மண். வா.உ.சிதம்பரனார் செலுத்திய கப்பலும், சுப்ரமணிய சிவாவின் பேச்சும், பாரதியின் பாட்டும், தமிழ் தென்றல் திருவிக நடத்திய பத்திரிகையும், பெரியார் விற்ற கதர் ஆடைகளும், செண்பகராமன், வீரவாஞ்சிநாதன் போன்றவர்கள் நடத்திய வீரப் போராட்டங்களும், பீரங்கியால் மார்பு பிளக்கப்பட்ட நிலையிலும் நெஞ்சுயர்ந்து நின்ற அழகுமுத்து கோனின் வீரமும், 'கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது'  என்று பாடிய காந்தியைச் செம்மல் நாமக்கல் கவிஞரின் தமிழும், தமிழ் போராட்டங்களால் ஆங்கிலேய அரசை உலுக்கிய சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் ஆற்றலும், பகத்சிங்ற்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையை கண்டு கொதித்து எழுந்து அவரது 'நான் ஏன் நாத்திகனானேன்' என்ற நூலை மொழிபெயர்த்து தந்தை பெரியார் மூலமாக வெளியிட்டதற்காக சிறை கொடுமை அனுபவித்த பொதுவுடமை போராளி தோழர் ஜீவாவின் தியாகமும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு என போராட்டக் களங்கள் கண்டு கொல்கத்தா, வேலூர் என பல மாதங்கள் சிறையில் கழித்த கர்மவீரர் காமராசரின் நாட்டுப்பற்றும், காந்தியின் 'யங் இந்தியா' இதழின் ஆசிரியராக பணியாற்றியதுடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பாவின் காந்தியப்பற்றும், அண்ணல் அம்பேத்கரின் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் உழைப்பும், இந்திய நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதுள்ள பற்றில் இணையற்றவராகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் வழிகாட்டுதலும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும்படை அனுப்பி வைத்த பசும்பொன் ஐயா முத்துராமலிங்கரின் வீரமும், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் என தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு சிறை எய்திய ஜபக்கனியின் உணர்வும், ராஜாஜி நடத்திய பயணங்களும், திருப்பூர் குமரன் தூக்கிப் பிடித்த கொடியும் இணைந்தது தான் இன்று நாம் சுவாசிக்கும் விடுதலைக் காற்று.

 

அதனால்தான் தியாகத்தை போற்றுவதில் திமுக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப்பற்றில் திமுக அரசு உறுதியாக இருந்து வந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட பொழுது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா. 1971 ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திய போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன தீர்மானம் போட்டவர் கலைஞர்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.