Skip to main content

வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!   

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Real estate person passes away in trichy police investigation

 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து சங்கர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துவருகிறார். இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்துத் தலைவர் புவனேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். 

 

இந்நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் வேளையில் அவர்கள் கொண்டுவந்த சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

 

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது