Skip to main content

வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!   

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Real estate person passes away in trichy police investigation

 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து சங்கர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துவருகிறார். இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்துத் தலைவர் புவனேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். 

 

இந்நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் வேளையில் அவர்கள் கொண்டுவந்த சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

 

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.