Skip to main content

சமூக இடைவெளிக்கு விலக்கு கொடுத்த மக்கள்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

ration shops peoples not maintain the social distancing

கரோனாவைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியும், முகக்கவசமும் அவசியம். அதைவிட அவசியம் தடுப்பூசி போடுவது என்று தொடர்ந்து அரசுகளும், ஆய்வாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும் தங்கள் தேவைகளுக்காகக் கூடுகின்ற மக்கள் விதிமுறைகளை மறந்து குவிந்து வருவது பேரச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி முக்கியம் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டோக்கன் வழங்கும் முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் ஒன்று ரேசன் கடைகள். ஏராளமான ரேசன் கடைகள் பகுதி நேரக்கடைகளாக இருப்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் டோக்கன் முறைகள் காணாமல் போகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1002 ரேசன் கடைகள் இருந்தாலும் பாதிக்கடைகளுக்கு மேல் தமிழக அரசின் 14 பொருட்கள் இதுவரை வரவில்லை. அதனால் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு பணம் கொடுத்துவிட்டு பொருள் வர வர கொடுக்கிறார்கள். மாதக்கடைசி என்பதால் பொருள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் ரேசன் கடை திறக்கும் நாளில் ஒரே நேரத்தி்ல் மொத்த மக்களும் கூடுவதால் பெரிய சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் உள்ள ரேசன் கடை இன்று திறக்கும் நாள் என்பதால் நேற்று (25/06/2021) இரவு முதலே பொதுமக்கள் வந்து பை, கல், செப்பல்கள் வைத்து இடம்பிடித்ததோடு பலர் அங்கேயே தங்கிவிட்டனர்.

 

இன்று (26/05/2021) காலை கடை திறக்கும் போது நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசையில் சிறிய இடைவெளிக் கூட இல்லாமல் கரோனா அச்சமின்றி நெருக்கி நின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே பரவல் இருந்துள்ளது என்ற அச்சமும் அவர்களிடம் இல்லை.

 

"டோக்கன் கொடுத்தாங்க பணம் கொடுத்துட்டு 14 பொருள் வரலன்னு சொன்னாங்க. இன்னைக்கு 400 பேருக்கு பொருள் வந்திருக்குனு தெரிஞ்சது அதை வாங்க வந்தாச்சு. இந்த கடை இன்னும் சில நாள் கழிச்சு தான் திறப்பாங்க அப்ப வந்தால் பொருள் இல்லன்னா என்ன செய்யறது. அப்பறம் மாதம் முடிஞ்சுடும். மாதம் முடிஞ்சா பொருள் தருவாங்களானும் தெரியல" என்றனர் பொதுமக்கள்.

 

அதிகாரிகள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக டோக்கன் வழங்கி பொருள் கொடுத்தால் இப்படி மக்கள் குவியமாட்டார்கள். கரோனாவும் பரவாது. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலம் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஜூன் மாதம் வழங்க வேண்டிய வழக்கமான பொருட்களையும் நிவாரணப் பொருட்களையும் ஜூலை மாதத்தில் வாங்கலாம் என்றால் அதற்கான அறிவிப்பை செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். இல்லை என்றால் தமிழக ரேசன் கடைகளில் இன்னும் சில நாட்களில் கூட்டம் அதிகரிக்கும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.